ரூ. 1600 கோடி வெள்ள நிவாரண நிதி கோரி மத்திய அரசுக்கு தமிழக அரசு அறிக்கை
சென்னை: தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மழை, வெள்ள பாதிப்புகளை சீரமைக்க ரூ. 1600 கோடி நிதி கோரி மத்திய அரசுக்கு தமிழக அரசு அறிக்கை அனுப்பி வைத்துள்ளது.
இதுதொடர்பான விரிவான திட்ட அறிக்கையை தமிழக அரசின் தலைமைச் செயலாளர் மாலதி அனுப்பி வைத்துள்ளார்.
தமிழகத்தில் கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி என 11 மாவட்டங்கள் கனமழையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த மாவட்டங்களில் சாலை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த முதல்கட்டமாக100 கோடியை தமிழக அரசு ஒதுக்கியது.
மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் அறிக்கைக்குப் பிறகு, மழை நிவாரணப் பணிகளுக்காக 500 கோடி வழங்க தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில், பயிரிழப்பு, சாலைகள், குளங்கள், ஏரிகள் போன்றவற்றை நிரந்தரமாகச் சீரமைக்க1,607 கோடி தேசிய பேரிடர் நிவாரண நிதியின் வழியாக மத்திய அரசிடமிருந்து கோரப்படும் என தமிழக அரசு அறிவித்து இருந்தது.
இந்த அறிவிப்புக்கு இணங்க, மழைச் சேதம் குறித்த அறிக்கையை தயார் செய்து மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளார் தமிழக தலைமைச் செயலாளர் எஸ். மாலதி. இந்த அறிக்கையை ஆய்வு செய்யும் மத்திய அரசு, பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட தனது சார்பில் குழுவை அமைக்கும்.
மத்திய அரசின் குழு இன்னும் ஏழு அல்லது பத்து நாள்களுக்குள் தமிழகத்தில் மழை-வெள்ளம் பாதித்த பகுதிகளை ஆய்வு செய்யும். அதன் பின்னர் நிதி ஒதுக்கீடு குறித்து மத்திய அரசு முடிவு எடுக்கும்.
கடந்த 2008-ல் தமிழகத்தில் கனமழை பெய்தது. அப்போது, கடலோர, தென் மாவட்டங்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகின. இந்த பாதிப்பைச் சீர் செய்ய இதேபோன்று, மத்திய அரசிடம் இருந்து தமிழகம் நிதியைக் கோரியது. நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த மத்தியக் குழு, தமிழகத்துக்கு 300 கோடியை ஒதுக்கியது நினைவிருக்கலாம்.
கடந்த மூன்று நாள்களாக கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால் பல இடங்களில் சேதம் ஏற்பட்டுள்ளது. இந்த சேத விவரம் மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை என்றும், மத்திய குழு பார்வையிட வரும்போது அந்த மாவட்டத்தில் உள்ள சேத தகவல்களை கவனத்தில் எடுத்துக் கொள்ளும் எனவும் தமிழக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications