நெல்லையின் புதிய எஸ்பி விஜயேந்திர பிதரி: கந்து வட்டிக்காரர்களுக்கு எச்சரிக்கை
நெல்லை: பொதுமக்களை சந்தித்து மனுக்கள் பெற்று உரிய நடவடிக்கை எடுப்பேன் என நெல்லை மாவட்ட புதிய எஸ்பி விஜயேந்திர பிதரி தெரிவித்தார்.
நெல்லை மாவட்ட எஸ்பியாக பணியாற்றிய ஆஸ்ரா கர்க் மதுரை சிறப்பு காவல்படை கமாண்டன்டாக மாற்றப்பட்டார். தென்சென்னை போக்குவரத்து துணை கமிஷனர் விஜயேந்திர பிதரி நெல்லை மாவட்ட எஸ்பியாக நியமிக்கப்பட்டார். இவர் நேற்று பொறுப்பேற்றார்.
எஸ்பி விஜயேந்திர பிதரி கூறும்போது,
எஸ்பி ஆஸ்ரா கர்க் இங்கு சீரிய முறையில் பணியாற்றியுள்ளார். நானும் அவரை போல் பணியாற்றுவேன். ஆற்றுமணல் கொள்ளை, கந்துவட்டி, நிலமோசடி, மத, ஜாதி மோதல்கள் எழமால் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். சட்டம், ஒழுங்கு சீராக பராமரிக்கப்படும்.
தினமும் காலை அலுவலகத்தில் இருப்பேன். பொதுமக்கள் தங்கள் பிரச்சனை குறித்து என்னிடம் மனு கொடுக்கலாம். நாள்தோறும் மாலையில் இரு ஸ்டேஷன்களில் ஆய்வு செய்ய திட்டமிட்டுள்ளேன். அப்போது அந்தந்த பகுதி மக்களை நேரில் சந்தித்து மனுக்களை பெற்று குறைகளைத் தீர்க்க நடவடிக்கை எடுப்பேன். ஸ்டேஷன் வாரியாக மனுக்கள் பெறும் நாட்கள் குறித்து விரைவில் அறிவிப்பேன் என்றார்.
எஸ்பி பயோடேட்டா
எஸ்பி விஜயேந்திர பிதாரி பெங்களூருவைச் சேர்ந்தவர். இவரது தந்தை சங்கரி பிதரி பெங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர் என்பது குறிப்பிடத்தக்கது. தாய் உமா தேவி ஒரு மருத்துவர். சகோதரி விஜயலெட்சுமி மகாராஷ்டிராவில் ஐஏஎஸ் அதிகாரியாக உள்ளார்.
கடந்த 2005-ம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியான விஜயேந்திர பிதரிக்கு வயது 29. முதலில் ராஜஸ்தான் மாநிலம் தவுசா மாவட்டத்தில் ஏஎஸ்பியாக பணியாற்றினார். தவல்பூர், ஜெய்பூர் மாவட்டங்களில் எஸ்பியாக இருந்தார். கடந்த பிப்ரவரியில் மணிமுத்தாறு சிறப்பு போலீஸ் பட்டாலியன் கமாண்டன்டாக பணியாற்றினார்.
இதையடுத்து தென்சென்னை போக்குவரத்து துணை கமிஷனராக மாற்றப்பட்டார். தற்போது நெல்லை மாவட்ட எஸ்பியாக பொறுப்பேற்றுள்ளார். இவர் மனைவி ரோகினி விழுப்புரத்தில் பயிற்சி சப்-கலெக்டராக உள்ளார்.












Click it and Unblock the Notifications