நாடு முழுவதும் அதிருப்தி அலை: கவலையில் காங்கிரஸ்-எம்பிக்களுடன் சோனியா ஆலோசனை

வரும் திங்கள்கிழமை டெல்லியில் சோனியா தலைமையி்ல் இக் கூட்டம் நடக்கிறது.
நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடர் கடந்த மாதம் 9ம் தேதி தொடங்கியது. ஆனால், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முறைகேடு குறித்து நாடாளுமன்றக் கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிடக் கோரி இரு அவைகளிலும் பாஜக, அதிமுக உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றன.
இதை மத்திய அரசு ஏற்க மறுத்து விட்டதால் கடந்த 21 நாட்களாக இரு அவைகளும் தினமும் காலையில் கூடுவதும், அடுத்த சில நிமிடங்களில் ஒத்தி வைக்கப்படுவதுமாக உள்ளன.
நாளை மறுநாள், திங்கள்கிழமை, கூட்டத்தொடரின் கடைசி நாளாகும். அன்றும் இதே நிலைதான் தொடரும் என்பது உறுதியாகி விட்டது. நாடாளுமன்றத்தின் ஒரு கூட்டத்தொடர் இவ்வளவு நாட்கள் தொடர்ந்து முடக்கப்பட்டது இதுவே இந்திய அரசியல் வரலாற்றில் முதல் முறையாகும்.
மேலும் பிப்ரவரியில் நடக்கும் பட்ஜெட் கூட்டத் தொடரிலும் இதே நிலை நீடிக்கலாம் என்றும் தெரிகிறது. மேலும் ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக அடுத்த வாரத்திலிருந்து நாடு முழுவதும் போராட்டங்களை நடத்த எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
மும்பை ஆதர்ஷ் குடியிருப்பு ஊழல், காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஊழல், ஸ்பெக்ட்ரம் விவகாரம் என அடுத்தடுத்து காங்கிரஸ் கூட்டணி சர்ச்சைகளால் திணறி வருகிறது.
அந்தக் கட்சிக்கும் கூட்டணிக்கும் எதிராக நாடு முழுவதும் அதிருப்தி அலை வீசுகிறது. இதனால் காங்கிரஸ் பெரும் கவலையடைந்துள்ளது.
இந்த நெருக்கடியான நிலையில் இருந்து மீள திட்டங்கள் தீட்டுவது குறித்து ஆலோசிக்க எம்.பிக்களின் அவசரக் கூட்டத்தை சோனியா கூட்டியுள்ளார்.
வீரமணி தலைமையில் திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம்:
இந் நிலையில் நாடாளுமன்றத்தை நடத்த விடாமல் தடை போட்டு வரும் எதிர்க்கட்சிகளை கண்டித்து, சென்னையில் திராவிடர் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மெமோரியல் ஹால் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தலைமை தாங்கினார்.
நிருபர்களிடம் பேசிய வீரமணி, நாடாளுமன்றத்தை எதிர்க்கட்சியினர் 21வது நாளாக நடத்த விடாமல் முடக்கியுள்ளனர். 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு பிரச்சனையை சிபிஐ விசாரித்து கொண்டிருக்கிறது. தற்போது, ஒரு நபர் கமிஷன் அமைத்தும் விசாரிக்கப்படுகிறது.
இந் நிலையில், ஸ்பெக்ட்ரம் வழக்கை 2001ம் ஆண்டு பாஜக ஆட்சியில் இருந்தே விசாரிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் கூறியிருக்கிறது. பாஜக ஆட்சியில்தான் தொலைத்தொடர்பு துறையில் மாபெரும் ஊழல், குளறுபடிகள் நடந்திருக்கிறது என்று ரட்டன் டாட்டா சொல்லி இருக்கிறார்.
எனவே, பாஜக ஆட்சியில் தொலைத்தொடர்பு துறையில் நடந்த ஊழல்கள் இனிமேல்தான் வெளிச்சத்திற்கு வரும் என்றார்.












Click it and Unblock the Notifications