பிரதமர் வென் ஜியாபோவின் இந்தியா வருகை எதிரொலி-காஷ்மீரிகளுக்கு தனி விசாவை நிறுத்தியது சீனா

இந்தியாவின் ஒரு பகுதியாக காஷ்மீரை ஏற்றுக் கொள்ளாமல் வால்தனம் செய்து வருகிறது சீனா. காஷ்மீரிலிருந்து யாராவது சீனா வர விசா கோரினால் அவர்களுக்கு தனியாக ஒரு விசா அனுமதியை பாஸ்போர்ட்டுடன் இணைத்துக் கொடுத்து இந்தியாவை எரிச்சலுக்குள்ளாக்கி வருகிறது.
இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்து வந்தபோதிலும் சீனா அதுகுறித்து அலட்டிக் கொள்ளவே இல்லை. அதற்கு மேல் சீனாவைக் கண்டிக்கவோ, எதிர்ப்பு தெரிவிக்கவோ இந்திய அரசும் திராணியில்லாமல் பம்மிப் போய்க் கிடக்கிறது.
இந்த நிலையில் வருகிற புதன்கிழமை சீனப் பிரதமர் வென் ஜியாபோ இந்தியா வருகிறார். இந்தப் பின்னணியில் தற்போது தனி விசா தருவதை நிறுத்தி வைத்துள்ளது சீனா.
இப்போது காஷ்மீரிகளுக்கு தனி விசா வழங்குவதை சீனா நிறுத்திக் கொண்டுள்ளது என்று இந்திய வெளிறவுத்துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சமீபத்தில் சீனாவில் நிறைவடைந்த ஆசிய விளையாட்டுப் போட்டி நிறைவு விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்ள காஷ்மீரைச் சேர்ந்த பாடகி தன்யா குப்தா, சீனா சென்றார். அவருக்கு சீன தூதரகம் தனி விசா வழங்கவில்லை. அவருக்குப் பின் சீனா சென்ற காஷ்மீர்வாசிகள் இருவருக்கும் தனி விசா வழங்கவில்லை.
முன்னதாக வியட்நாம் சென்ற போது சீன பிரதமர் வென் ஜியாபோவை, பிரதமர் மன்மோகன் சிங் சந்தித்தார். அப்போது இந்த தனி விசா விவகாரம் குறித்து இந்தியாவின் அதிருப்தியை அவரிடம் நேரில் தெரிவித்து, இதனை சீனா மாற்றிக்கொள்ள வேண்டுமென வலியுறுத்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
முன்னதாக கடந்த ஓராண்டாக காஷ்மீரில் இருந்து சீன விசா கேட்டு விண்ணப்பிப்பவர்களுக்கு மட்டும் சீனா தனி விசாவை வழங்கி வந்தது.
வென் ஜியாபோ இந்தியா வரும்போது அவரிடம் இந்த விசா குறித்து இந்தியத் தரப்பு தீர்மானமாகப் பேசும் என்று தெரிகிறது. இதையடுத்தே தனி விசா குசும்பை சீனா நிறுத்தி வைத்துள்ளதாக தெரிகிறது.












Click it and Unblock the Notifications