நீதிபதி ரகுபதியை ராஜா மிரட்டியது கே.ஜி.பாலகிருஷ்ணனுக்குத் தெரியும்-எச்.எல்.கோகலே
ரகுபதியை ராஜா மிரட்டியதாக கூறப்படுவது குறித்து தனக்கு கோலேவிடமிருந்து எந்தக் கடிதமும் வரவில்லை என்று முன்னதாக கூறியிருந்தார் கே.ஜி.பாலகிருஷ்ணன். ஆனால் தான் தெளிவாக அதுகுறித்து குறிப்பிட்டிருந்ததாக கோகலே கூறியிருப்பதால் பாலகிருஷ்ணன் பொய் சொல்லியுள்ளாரோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
ரகுபதி நீதிபதியாக இருந்தபோது ராஜாவுக்கு வேண்டியவருக்கு சாதகமாக ஜாமீன் வழங்குவது தொடர்பாக பார் கவுன்சில் தலைவர் சந்திரமோகன் ரகுபதியை சந்தித்ததாகவும், அப்போது ராஜா தொலைபேசியில் நீதிபதியுடன் பேச முயன்றதாகவும் சர்ச்சை எழுந்தது.
இதையடுத்து மத்திய அமைச்சர் ஒருவர் வழக்கில் தலையிடுவதாக குற்றம் சாட்டினார் நீதிபதி ரகுபதி இருப்பினும் அவர் ராஜாவின் பெயரை அப்போது சொல்லவில்லை. ஆனால் அப்போதைய தலைமை நீதிபதி கோகலேவை நேரில் சந்தித்து இதுதொடர்பாக விரிவாக தெரிவித்து ஒரு கடிதம் கொடுத்திருந்தார்.
இந்தக் கடித விவரம் சமீபத்தில் உயர்நீதிமன்றத்தில் வெளியிடப்பட்டது. மேலும், இதுகுறித்து ரகுபதி கூறுகையில், தான் கோகலேவை நேரில் சந்தித்து புகார் கடிதத்தைக் கொடுத்தபோது அதை அப்போதைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணனுக்கு அனுப்பி வைக்குமாறு கோரியதாகவும் கூறியிருந்தார்.
ஆனால் அப்படி ஒரு கடிதம் வரவில்லை என்று கே.ஜி.பாலகிருஷ்ணன் உடனடியாக மறுப்பு தெரிவித்தார். ஆனால் கே.ஜி.பாலகிருஷ்ணன் கூற்றை மறுப்பது போல தற்போது கோகலே கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், நீதிபதி ரகுபதி என்னிடம் கொடுத்த கடிதத்தை படித்த பின்னர் இதுதொடர்பாக ஒரு அறிக்கையை அப்போதைய தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணனுக்கு அனுப்பி வைத்தேன். அதில் ராஜாவின் பெயரையும் நான் தெளிவாக குறிப்பிட்டிருந்தேன். இப்படி இருக்கையில், நான் ராஜாவின் பெயரை குறிப்பிடவில்லை என்று கே.ஜி.பாலகிருஷ்ணன் கூறியிருப்பது வருத்தம் தருகிறது, அது தவறான தகவல்.
நீதிபதி ரகுபதி என்னிடம் கொடுத்த கடிதத்தை மறைக்க நான் முயன்றதாக கூறப்படும் குற்றச்சாட்டிலும் சற்றும் உண்மை இல்லை.
நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் கூறுகையில், நான் அனுப்பிய அறிக்கையில் ராஜாவின் பெயர் இல்லை என்று கூறியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.
ரகுபதி எனக்கு அனுப்பிய கடிதத்தின் 2வது பாராவில் ராஜாவின் பெயரை தெளிவாக குறிப்பிட்டிருந்தார். இந்தக் கடிதத்தையும் நான் கே.ஜி.பாலகிருஷ்ணனுக்கு அனுப்பி வைத்தேன் என்று கூறியுள்ளார் கோகலே.
கோகலேவின் இந்த விளக்கத்தால் கே.ஜி.பாலகிருஷ்ணனின் பேச்சு குறித்து பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.