ஷூ, பேட்ஜ் அணியாததால் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்ட காவலர்கள்-அடுத்த நாளே ராஜினாமா
நெல்லை: நெல்லை மாவட்டம் நான்குநேரி காவல் நிலையத்தில் ஷூ, பேட்ஜ் அணியாமல் பணிக்கு வந்திருந்த இரண்டு காவலர்கள் ஆயுதப் படைக்கு மாற்றப்பட்டனர். ஆனால் அடுத்த நாளே அவர்களில் ஒருவர் தனது வேலையை ராஜினாமா செய்து விட்டார்.
சந்தனக் கடத்தல் வீரப்பனை வேட்டையாட கர்நாடக அரசால் அமைக்கப்பட்ட சிறப்பு அதிரடிப்படைத் தலைவராக இருந்தவர் சங்கர் பிதரி. இவரது மகன் விஜயேந்திர பிதரி. இவர் தற்போது நெல்லை மாவட்ட எஸ்.பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
விஜேயந்திர பிதரி பொறுப்பேற்ற முதல் நாள் நாங்குநேரி, களக்காடு, ஏர்வாடி ஆகிய காவல் நிலையங்களுக்கு சென்று ஆய்வு நடத்தினார்.
அப்போது நான்குநேரி காவல் நிலையத்தில் பேட்ஜ் அணியாத போலீஸ்காரர் ராஜன் மற்றும் ஏர்வாடி காவல் நிலையத்தில் ஷூ அணியாமல் வந்த போலீஸ்காரர் திருநாவுக்கரசு ஆகியோரை பாளையில் உள்ள ரூரல் ஆயுதப்படைக்கு அதிரடியாக மாற்றம் செய்து உத்தரவிட்டார்.
இந்நிலையில் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்ட ராஜன் தன்னுடைய பணியை ராஜினாமா செய்வதாக எஸ்பிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் நான் பேட்ஜ் அணியவில்லை என்பதற்காக ஆயுதப்படைக்கு மாற்றியது எனக்கும், எனது குடும்பத்துக்கும் அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, எனது பணியை ராஜினாமா செய்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த சம்பவம் போலீசார் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications