பெரும் அரசியல் சக்தியாக உருவெடுத்துள்ளார் ஜெகன் மோகன்-ரோஜா

ஆரம்பத்தில் தெலுங்குதேசத்தில் இருந்தார் ரோஜா. பின்னர் அங்கிருந்து விலகி காங்கிரஸில் இணையப் போக இருந்த நேரம் பார்த்து ராஜசேகர ரெட்டி இறந்து விட்டார். இதனால் ரோஜாவின் அரசியல் வாழ்க்கை சற்றே கருகிப் போனது.
இந்தநிலையில் தற்போது தெய்வாதீனமாக ஜெகன் மோகன்ரெட்டி காங்கிரஸிலிருந்து பிய்த்துக் கொண்டு வந்துள்ளார். இந்த சந்தர்ப்பத்தை நழுவ விடாமல் கப்பென்று பிடித்துக் கொண்ட ரோஜா, கிட்டத்தட்ட தினசரி ஜெகன் மோகனைப் பாராட்டி பாட்டுப் பாடி வருகிறார்.
இந்த நிலையில் ஆந்திராவில் வெள்ளம் பாதித்த பகுதிகளைப் பார்வையிட ரெட்டி போயிருந்தார். போய் விட்டு இன்று ஹைதராபாத் திரும்பினார். அவரை ரோஜா போய் சந்தித்துப் பேசினார்.
பின்னர் வெளியே வந்த ரோஜா செய்தியாளர்களிடம் பேசுகையில்,
ஆந்திராவில் மிகப்பெரிய அரசியல் சக்தியாக ஜெகன்மோகன் ரெட்டி உருவெடுத்துள்ளார். அவருக்கு மக்கள் ஆதரவு பல மடங்கு பெருகி உள்ளது.
காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களில் 90 சதவீதம் பேர் ஜெகனைத்தான் ஆதரிக்கிறார்கள். ஆந்திராவில் அடுத்த தேர்தலில் காங்கிரசுக்கு 3வது இடம் கூட கிடைக்காது. அக்கட்சிக்கு பெரும்பாலான தொகுதிகளில் டெபாசிட் கிடைக்காது.
முன்னேற்றப்பாதையில் சென்ற ஆந்திராவை சீர் குலைத்தது காங்கிரஸ் மேலிடம்தான். நேர்மையற்றவர்களை முதல்வர்களாக நியமித்து மாநில முன்னேற்றத்தை தடுத்து நிறுத்தி விட்டது. இதனால் மக்கள் காங்கிரசுக்கு தேர்தலில் பாடம் புகட்டுவார்கள் என்றார் ரோஜா.
இப்போதைக்கு ஜெகன் மோகன் ரெட்டி தரப்பில் ரோஜா மட்டுமே தொடர்ந்து அவரது புராணம் பாடி வரும் குறிப்பிடத்தக்க பெண் என்பதால் நிச்சயம் அவருக்கு மகளிர் அணித் தலைவி பதவி தரப்படும் என்று ரோஜா வட்டாரம் எதிர்பார்க்கிறதாம்.












Click it and Unblock the Notifications