ஆயதப்படைக்கு மாற்றப்பட்ட 22 போலீசாருக்கு மீண்டும் ஸ்டேஷன் பணி: டிஐஜி உத்தரவு
நெல்லை: சிறு சிறு தவறுகளுக்காக ஆயுதப்படைக்கு மாற்றப்பட்ட 22 போலீசாரை மீண்டும் ஸ்டேஷன் பணிக்கு மாற்ற நெல்லை டிஐஜி சண்முகராஜேஸ்வரன் உத்தரவிட்டார்.
நெல்லை மாவட்ட போலீசுக்கு சொந்தமான வாகனங்கள், ஆயுதங்களை நேற்று பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் டிஐஜி சண்முகராஜேஸ்வரன் ஆய்வு செய்தார். அப்போது அவர் போலீசாரின் குறைகளைக் கேட்டார்.
போலீசார் தனித்தனியே டிஐஜியை சந்தித்து தங்கள் குறைகளைத் தெரிவித்தனர். காலதாமதமாக பணிக்கு வருதல், பணியில் கவனக்குறைவு உள்ளிட்ட சிறு தவறுகளுக்காக மாவட்டம் முழுவதும் 26 போலீசார் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டிருந்தனர். இவர்கள் அனைவரும் இடமாற்ற உத்தரவை ரத்து செய்து மீண்டும் ஸ்டேஷன் பணி வழங்க வலியுறுத்தி டிஐஜியிடம் ஏற்கனவே மனு அளித்தனர். இவர்கள் நேற்று டிஐஜியிடம் மீண்டும் ஸ்டேஷன் பணி வழங்க வலியுறுத்தினர்.
பின்னர் டிஐஜி சண்முகராஜேஸ்வரன் கூறும்போது,
சிறு தவறுக்காக இடமாற்றம் செய்யப்பட்ட 26 பேரிடம் விசாரணை நடத்தினேன். அவர்கள் செய்த தவறு, குடும்ப சூழ்நிலை, பழைய நடத்தைகள், ஏற்கனவே தண்டனை பெற்றவரா என விசாரித்தேன்.
சிறு தவறுகள் செய்ததற்காக ஆயுதப்படைக்கு மாற்றப்பட்ட 22 பேருக்கு மீண்டும் ஸ்டேஷன் பணி வழங்கப்படும். மீதமுள்ள 4 பேரிடம் விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications