கரூரில் கொமுக மாநாடு-கொங்குநாடு இதழ் நிருபருக்கு அடி உதை
கரூர் : கரூரில் கொங்கு முன்னேற்ற கழகம் சார்பில் விவசாயிகள் அரசியல் உரிமை மாநாடு இன்று காலை துவங்கியது.
கரூரில் கொங்கு முன்னேற்ற கழகம் சார்பில் கரூர் மண்மங்கலத்தில் சுமார் 40 ஏக்கர் நிலப்பரப்பில் இன்று விவசாயிகள் அரசியல் உரிமை மாநாடு காலை முதல் நடைபெறுகின்றது.
இன்று காலை 9 மணிக்கு நாதஸ்வர நிகழ்ச்சியுடன் விழா தொடங்கியது. பின்பு கட்சிக் கொடி ஏற்றி வைத்து, மறைந்த கோவை செழியன் திருஉருவ சிலையை கொமுக தலைவர் பெஸ்ட் ராமசாமி திறந்து வைத்தார்.
மாநாட்டுப் பந்தல் அருகில் விவசாயிகள் கண்காட்சியை கட்சியின் மாநில பொதுச் செயலாளர் பொறியாளர் ஈஸ்வரன் தொடங்கி வைத்தார். பின்பு, மாநாட்டு மேடையில் விழா மலர் வெளியிடப்பட்டது.
மாநாட்டில் சென்னை இந்துமதி கலைக் குழுவினரின் பரதநாட்டியம், இந்திரஜித் குழுவினரின் தேவராட்டம், தஞ்சை கலைக்குழுவினரின் மாடு, மயில், கரகாட்டம், கார்த்திகேயன் கலைக்குழுவின் நாடகம் மற்றும் கொங்கு சமுதாய மக்களின் கலா சாரத்தை விளக்கும் நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன.
இதனால் காலை முதலே கோவை, திருப்பூர், நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து கொமுகவினர் வந்து குவிந்த வண்ணம் உள்ளனர்.
மாலை நடைபெறும் நிகழ்ச்சியில், கொமுக தலைவர் பெஸ்ட் ராமசாமி மாநாட்டு தலைமை உரை ஆற்றுகிறார். மாநில பொருளாளர் பாலசுப்பிரமணியன், பேரவை தலைவர் திருச்சி தேவராஜ், தொழிற்சங்க செயலாளர் கொங்கு ராஜாமணி, அமைப்பாளர் திருப்பூர் வி.கே.முருகேசன் உள்பட பலர் பேசவிருக்கின்றனர்.
மாநாட்டின் உச்ச கட்ட நிகழ்ச்சியாக மாலை 7 மணிக்கு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளது.
கொங்குநாடு இதழின் செய்தியாளர் தாக்கப்பட்டார்:
கரூரில் கொங்குநாடு இதழின் செய்தியாளர் ஆனந்த்குமார் மர்ம நபர்களால் தாக்கப்பட்டார்.
இன்று நடந்து கொண்டிருக்கும் கொங்கு முன்னேற்ற கழக மாநாடு குறித்து கொங்குநாடு இதழின் செய்தியாளர் ஆனந்த்குமார் செய்தி மற்றும் விளம்பரம் போன்றவற்றை சேகரித்து வந்ததாக கூறப்படுகின்றது.
இந்த நிலையில், கடந்த புதன்கிழமை அன்று ஆனந்த்குமார் மோட்டார் வாகனத்தில் சென்று கொண்டிருக்கையில் ஆம்னி வேன் ஒன்று வழிமறித்தது. அதில் இருந்த மர்ம நபர்கள் அவரை காரில் கடத்திச் சென்று உருட்டுக் கட்டையால் தாக்கியதாகக் கூறப்படுகின்றது.
அவர்களிடம் இருந்து தப்பி வந்த ஆனந்த்குமார் கொமுக மாநாட்டு திடலுக்கு வந்தார். அவரை அங்குள்ளவர்கள் காப்பாற்றி அருகில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி மற்றும் சிகிச்சை அளிக்கப்பட்டது.
இது குறித்து அவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் அந்த மர்ம நபர்களை வலை வீசித் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications