ரெட்டி சகோதரர்கள் மேற்கொண்டு வரும் தொழில் அவர்களது சொந்த விவகாரம்-எதியூரப்பா

கடந்த வாரம் ரெட்டி சகோதரர்களான ஜனார்த்தன ரெட்டி, கருணாகர ரெட்டி மற்றும் உறவினர் ஸ்ரீராமுலு ஆகியோரின் சுரங்கத் தொழிலில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக கூறி முதல்வரிடம் விரிவான அறிக்கை கேட்டிருந்தார் பரத்வாஜ்.
இதுதொடர்பாக ஆளுநர் எழுதிய கடிதங்களுக்கு நேற்று 3 பக்க பதிலை அனுப்பினார் எதியூரப்பா. அதில் கூறப்பட்டுள்ளதாவது...
பெல்லாரி மாவட்டத்தில் ஜனார்த்தன ரெட்டி, கருணாகர ரெட்டி மற்றும் ஸ்ரீராமுலு ஆகியோர் மேற்கொண்டு வரும் தொழில் அவர்களது தனிப்பட்ட விவகாரம். அதற்கும், அரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
ஆளுநர் குறிப்பிட்டுள்ள நிலம் தொடர்பான அறிவிப்பு ரத்து செய்யப்பட்ட சம்பவம் எனது ஆட்சியில் நடைபெறவில்லை. மாறக, குமாரசாமி முதல்வராக இருந்தபோதும், அதற்கு முந்தைய அரசுகள் ஆட்சியில் இருந்தபோதும் நடந்தவையாகும்.
குமாரசாமி கொடுத்த உள்நோக்கத்துடன் கூடிய புகாரின் அடிப்படையில் நீங்கள் எனக்கு கடிதம் எழுதியுள்ளீர்கள்.
எனது மகனுக்கும், எனது மகளுக்கும் ஒதுக்கப்பட்ட நிலத்தை இருவரும் திரும்பப் பெற்று விட்டனர். இதுதொடர்பாக நில ஒதுக்கீடு தொடர்பாக கர்நாடக உயர்நீதிமன்றம் விதித்துள்ள உத்தரவுகளை மதித்து நான் நடப்பேன். மேலும் 1995ம் ஆண்டு முதல் நடந்த பல்வேறு நில ஊழல்கள் தொடர்பான விசாரணையை பத்மராஜ் கமிஷன் ஏற்கனவே தொடங்கி விட்டது என்பதையும் உங்களது கவனத்திற்குக் கொண்டு வருகிறேன்.
ரெட்டி சகோதரர்கள் மேற்கொண்டு வரும் தொழிலைப் பொறுத்தவரை, அவர்களுக்கும், அரசுக்கும் இடையே எந்தவிதமான காண்டிராக்டும் பரிமாறிக் கொள்ளப்படவில்லை.
கர்நாடகத்தில் சட்டவிரோத சுரங்கத் தொழிலை தடுக்கும் வகையில் பல்வேறு சுற்றறிக்கைகளை, அறிவிப்புகளை அரசு பிறப்பித்துள்ளது. அதை முறையாக கடைப்பிடித்தும் வருகிறோம்.
மத்திய அரசும், இந்த விவகாரத்தில் மாநில அரசுடன் ஒத்துழைத்தால் மேலும் சிறப்பாக செயல்பட முடியும் என்பதையும் உங்களுக்கு சுட்டிக் காட்ட விரும்புகிறேன். மத்திய அரசு ஒத்துழைப்பு கொடுத்தால் சுரங்கத் தொழில் மூலம் அரசுக்கு்க கிடைக்கும் வருவாயும் அதிகரிக்கும்.
இதுதொடர்பாக ஏற்கனவே முன்னாள் பிரதமர் தேவெ கெளடா உங்களுக்கு கடிதமும் எழுதியுள்ளார். அதில் மத்திய அரசிடம் உங்களுக்குள்ள செல்வாக்கைப் பயன்படுத்துமாறு கோரியுள்ளார். மாநில நலனைக் கருத்தில் கொண்டு நீங்களும் அதைச் செய்வீர்கள் என்று நம்புகிறேன் என்று கூறியுள்ளார் எதியூரப்பா.












Click it and Unblock the Notifications