ஆந்திராவிலிருந்து காங்கிரஸை விரட்டுவார் ஜெகன்மோகன் ரெட்டி!-ரோஜா
ஹைதராபாத்: ஆந்திராவில் காங்கிரஸை அடியோடு ஒழித்துக் கட்டுவார் ஜெகன் மோகன் ரெட்டி. அவருக்குதான் அந்த சக்தி உள்ளது, என்றார் நடிகை ரோஜா.காங்கிரஸிலிருந்து வெளியேறிய ஜெகன்மோகன் ரெட்டி விவசாயிகளுக்கு கூடுதல் வெள்ள நிவாரணம் கேட்டு விஜயவாடாவில் 48 மணி நேரம் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். இதில் நடிகை ரோஜா கலந்து கொண்டு பேசினார்.
அவர் கூறுகையில், "ஜெகன்மோகன் ரெட்டியை அரசியலை விட்டே ஒழிக்க காங்கிரஸ் மேலிடம் முயற்சி செய்தது. இதனால் ஜெகன்மோகன் தனியாகப் பிரிந்து வந்து விட்டார். ஆந்திராவில் அவருக்கு தான் மக்கள் செல்வாக்கு உள்ளது. காங்கிரஸ் தொண்டர்கள் கூண்டோடு விலகி ஜெகன் அணியில் சேர்ந்து விட்டனர்.
ஜெகன்மோகன் ரெட்டியால் காங்கிரசுக்கு அழிவு காலம் தொடங்கி விட்டது. ஆந்திர மக்கள் சோனியாகாந்தி, ராகுல் காந்தியைப் பார்த்து காங்கிரசுக்கு ஓட்டு போடவில்லை. ராஜசேகர ரெட்டிக்காகத்தான் ஓட்டுப் போட்டனர். இனி அவர்கள் ஜெகனைத்தான் ஆதரிப்பார்கள். ஆந்திராவிலிருந்தே காங்கிரஸ் விரட்டப்படும் காலம் நெருங்கிவிட்டது.
இந்த உண்ணாவிரத போராட்டத்திற்கே பல லட்சம் தொண்டர்கள் வந்துள்ளனர். இதைப் பார்க்கும் போது ஆந்திர மக்கள் ஜெகன் மீது மட்டுமே நம்பிக்கை வைத்திருப்பது தெரிகிறது...," என்றார்.
நடிகையும் ஜெகந்திராபாத் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.வுமான ஜெயசுதா பேசும் போது, “ஜெகன்மோகன் ரெட்டி இளைஞர்களுக்கு நல்ல வழி காட்டியாக உள்ளார். அவர் முதல்வரானால் ஆந்திரா இந்தியாவிலேயே முன்னணி மாநிலமாக மாறும்" என்றார்.
ஆந்திர முன்னாள் முதல்வர் லட்சுமி பார்வதியும் ஜெகனைத்தான் ஆதரிக்கிறார். இந்த உண்ணாவிரதத்தில் அவரும் கலந்து கொண்டு ஜெகனை வாழ்த்தினார். அவர் கூறுகையில், "ஜெகன்மோகன் ரெட்டி சுறு சுறுப்பான இளைஞர். அவருக்கு மக்கள் செல்வாக்கு உள்ளது. முதல்வராகும் தகுதியும் உள்ளது," என்றார்.