செல்போன், இன்டர்நெட் வசதியுடன் ராஜ வாழ்க்கை அனுபவிக்கும் 'கைதி' ராஜு!
ஹைதராபாத்: ஜாமீன் ரத்தாகி மீண்டும் சஞ்சலகுடா சிறைக்குள் அடைக்கப்பட்டிருக்கும் சத்யம் ராமலிங்க ராஜுவுக்கு சகல வசதிகளும் தடையின்றிக் கிடைப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ரூ 14000 கோடிக்கும் அதிகமான முறைகேட்டில் சிக்கி, கைதாகி சிறையில் அடைக்கப்பட்ட ராஜு, மருத்துவல காரணங்களைக் காட்டி கடந்த அக்டோபரில் ஜாமீன் பெற்றார்.
வெளியில் இருந்தால் சாட்சிகளைக் கலைத்துவிடுவார் என்று சிபிஐ ஆட்சேபணை தெரிவித்ததால், கடந்த நவம்பர் மாதம் அவரது ஜாமீனை ரத்து செய்த உச்சநீதிமன்றம் மீண்டும் ராஜூவை சிறையில் அடைத்தது.
ஆனால் அவர் எதற்காக சிறையில் அடைக்கப்பட்டாரோ அதை கேலிக்கூத்தாக்கியுள்ளனர், சஞ்சாலகுடா சிறை அதிகாரிகள்.
சிறையில் ராஜுவுக்கு சகல வசதிகளும் தாராளமாக, அதுவும் உயர் தரத்தில் கிடைக்கின்றன. பிராட்பேண்ட் வசதியுடன் இன்டர்நெட், மொபைல் போன்களை அவர் பயன்படுத்தி வருகிறார் சிறையில். கிட்டத்தட்ட ராஜவாழ்க்கை வாழ்கிறார் சிறையில் என்று சிறையிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிறையில் அவருக்குப் பொழுதுபோக்குக்கும் பஞ்சமில்லையாம். கேபிள் இணைப்புடன் கூடிய டிவி ஒன்றும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு அவருக்கு ஏ வகுப்பு சிறை ஒதுக்கப்பட்டிருந்தது. எனவே பாட்மிண்டன் விளையாடவும், விரும்பிய உணவை சமைத்து உண்ணவும் அவருக்கு அனுமதி இருந்தது. இப்போது அந்த சிறைவசதி ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் ராஜு விரும்பிய உணவுதான் அவருக்கு வழங்கப்படுகிறது. உடற்பயிற்சி என்ற பெயரில் பாட்மிண்டனுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
முன்பு ஜாமீனில் வெளிவந்த ராஜூ, நிஜாம் மருத்துவமனையில் இருந்தபோது, அவரைப் பார்க்க யாரெல்லாம் வருகிறார்கள் என்பதை குறித்து வைக்க ஒரு குறிப்பேடு வைக்கப்பட்டிருந்தது. சிறையிலும் அதற்கு முன்பு இருந்தது. ஆனால் இப்போது, சிறையில் அத்தகைய குறிப்பேட்டு முறையை நீக்கியுள்ளனர் ராமலிங்க ராஜுவுக்காக.
இதுகுறித்து ஆந்திர சிறைத்துறை ஐஜி கோபிநாத் ரெட்டியிடம் கேட்டபோது, ராஜு மற்ற கைதிகளைப் போலத்தான் நடத்தப்படுகிறார் என்று சுருக்கமாகக் கூறி முடித்துக் கொண்டார்.