சட்டப்பேரவை தேர்தலில் கருணாநிதி - ஜெயலலிதாவை எதிர்த்து போட்டி-கள் இயக்கம் முடிவு
கோவை: தமிழக சட்டப்பேரவை தேர்தலில் தமிழக முதல்வர் கருணாநிதி, அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஆகியோரை எதிர்த்து தமிழ்நாடு கள் இயக்கம் போட்டியிடும் என கள் இயக்கத்தின் தலைவர் நல்லசாமி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு கள் இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டம் அன்னூரில் நடந்தது. இதற்கு கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் பழனிச்சாமி தலைமை வகித்தார்.
இந்த கூட்டத்தில் தமிழ்நாடு கள் இயக்கத் தலைவர் நல்லசாமி கலந்து கொண்டு பேசியதாவது,
உலகில் 118 நாடுகளில் கள்ளுக்கு தடையில்லை. இந்தியாவில் பல மாநிலத்தில் கள் விற்கப்படுகிறது. ஆனால் தமிழகத்தில் மட்டும் அரசு கள்ளுக்கு தடை வித்துள்ளது. இதற்கு காரணம் தமிழகத்தில் கள் விற்பனை துவங்கிவிட்டால் டாஸ்மாக் கடைகளில் விற்பனை குறைந்து விடும் என்று சிலர் அஞ்சுகின்றனர்.
கள்ளுக்கு ஆதரவு தருவதாகக் கூறி வந்த கருணாநிதி பின்வாங்கி விட்டார். இதற்காக நியமிக்கப்பட்ட சிவசுப்பிரமணியன் கமிட்டி அளித்த அறிக்கையையும் வெளியிடவில்லை.
ஆனால் கமிட்டியின் பரிந்துரை குறித்து ஆய்வு செய்ய இன்னொரு கமிட்டி மட்டும் அமைத்துள்ளார். இது விவசாயிகளை ஏமாற்றும் தந்திரம் என்று தான் நினைக்கத் தோன்றுகிறது.
தமிழகத்தில் வரும் சட்டப்பேரவை தேர்தலில் முதல்வர் கருணாநிதி எங்கு போட்டியிட்டாலும், அவரை எதிர்த்து கள் இயக்கம் சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. பழனிச்சாமி போட்டியிடுவார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா எங்கு போட்டியிட்டாலும், அவரை எதிர்த்து நான் (நல்லசாமி) போட்டியிடுவேன் என்றார்.