ஜன. 29ல் இந்து மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை கேட்டு பாஜக போராட்டம்
பாவூர்சத்திரம்: இந்து மாணவர்களுக்கும் கல்வி உதவித் தொகை வழங்கக் கோரி சென்னையில் வருகிற ஜனவரி மாதம் 29-ம் தேதி பாஜக சார்பில் போராட்டம் நடைபெறும் என அக்கட்சியின் மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
பாஜக சார்பில் நடத்தப்பட்டு வரும் தாமரை ரத யாத்திரை நேற்று பாவூர்சத்திரம் வந்தது. பேருந்து நிலையம் அருகே ரத யாத்திரையில் திரளானவர்கள் கலந்து கொண்டு வரவேற்பு அளித்தனர். ரதயாத்திரையில் மாநிலத் தலைவர் பொன் ராதாகிருஷ்ணன் வந்தார்.
பின்னர் அவர் பேசியதாவது,
திமுக-காங்கிரஸ் அரசுகள் பள்ளி மாணவர்களை பாகுபடுத்தி பார்க்கிறது. கிறிஸ்துவ மற்றும் முஸ்லீம் மாணவர்களுக்கு 1வது வகுப்பு மாணவர்களுக்கு ரூ.1000, 2-வதுமுதல் 5-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ரூ.4000, 6 முதல் 10-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ரூ.7000, 11 முதல் 12-ம் வகுப்பு வரை உள்ளவர்களுக்கு ரூ.10,000, அதற்கு மேல் படிப்பவர்களுக்கு ரூ.80 லட்சம் வரையும் கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது. ஆனால் இந்து மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்க திமுக அரசு தயாராக இல்லை.
தேர்தலில் ஓட்டு போட்டு ஏமாந்து போவது இந்துக்கள் மட்டும்தான். எனவே, வரும் ஜனவரி மாதம் 29-ம் தேதி சென்னையி்ல் இந்து மாணவர்களுக்கும் கல்வி உதவித் தொகை வழங்கக் கோரி மிகப்பெரிய போராட்டம் நடக்கிறது. இதில் அனைவரும் குடும்பத்துடன் கலந்து கொள்ள வேண்டும் என்றார் அவர்.