தமிழகத்தில் காங்கிரஸ் 2வது இடத்தில் நீடிப்பதை விரும்பவில்லை-ராகுல்

Subscribe to Oneindia Tamil

திருப்பூர்: 2வது இடத்திலேயே காங்கிரஸ் நீடித்து வருவதை நான் விரும்பவில்லை. தமிழகத்தில் ஆட்சியைரப் பிடிக்க, அரசியல் மாற்றம் ஏற்பட இளைஞர் சக்தியை அதிகரிக்க வேண்டும். அப்போதுதான் அது நடக்கும் என்று பேசியுள்ளார் ராகுல் காந்தி.

தமிழகத்தில் நேற்று முன்தினம் 2வது கட்ட சுற்றுப்பயணத்தை தொடங்கி நேற்று முடித்துக் கொண்டார் ராகுல் காந்தி. சென்னை, மதுரை, நெல்லை, திருச்சி, திருப்பூர் ஆகிய ஊர்களுக்குச் சென்று இளைஞர் காங்கிரஸ் பிரதிநிதிகளைச் சந்தித்து கலந்துரையாடினார். அவர்களிடையே பேசுபகையில், இளைஞர்களும், தலித் சமுதாயத்தினரும் அரசியலில் தீவிரமாக பங்காற்ற வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்தார்.

தனது கடைசிக் கூட்டமான திருப்பூரில் அவர் பேசுகையில், 125 ஆண்டுகள் வரலாறு கொண்டுள்ள காங்கிரஸ் கட்சி கடந்த 40 ஆண்டுகள் தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பில் இல்லை. தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்க இளைஞர் சக்தி அதிகரிக்கப்பட வேண்டும். அதன்மூலமே ஆட்சிமாற்றமும், அரசியல் மாற்றமும் வரும். இப்போது தமிழகத்தில் காங்கிரஸ் இரண்டாம் நிலையில் உள்ளதை விரும்பவில்லை.

காங்கிரஸ் தலைமையில் ஆட்சியை ஏற்படுத்தி முதல்வர் பொறுப்புக்கு வர வேண்டும். தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியினர் சட்டப்பேரவை, மக்களவை உறுப்பினர்களாகியுள்ளனர். ஆனால், ஊராட்சித் தலைவர் பதவிகளை தவறவிட்டுவிட்டோம். எல்லா இடங்களிலும் காங்கிரஸை முன்னிலைப்படுத்தும்போதுதான் ஆட்சியைப் பிடிக்க முடியும். அதற்கு கிராமப்புற ஏழை மக்களின் பிரச்னைகளைத் தீர்க்கப் போராட வேண்டும்.
அதைச் செய்யாமல் ஆட்சியைப் பிடிக்க முடியாது.

தொடர்ந்து, ஊராட்சி, வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு போட்டியிட்டு காங்கிரஸ் கட்சியினர் பொறுப்புக்கு வர வேண்டும். அதற்கடுத்து, சட்டப்பேரவை, நாடாளுமன்ற உறுப்பினர் மட்டுமின்றி முதல்வர் பதவியையும் கொடுப்பது எனது வேலை.

காங்கிரஸ் கட்சியிலிருந்த காந்தி, காமராஜர், கக்கன் போன்ற தலைவர்கள் எளிமையாக வாழ்ந்து மக்களுக்காகப் பாடுபட்டனர். அத் தலைவர்களைப் போல் இங்கு பல இளைஞர்கள் உள்ளனர்.

தமிழக அரசியலில் மாற்றம் வர அத்தகையோர் முன்வர வேண்டும். தமிழகத்தில் ஊராட்சித் தலைவர், வார்டு உறுப்பினர் பதவிகளைக் கைப்பற்றினால் முதல்வர் பதவி தானாகவரும்.

பெண்கள் சக்தி இல்லாமல் எந்தவொரு இயக்கமும் வலுப்பெறாது. தமிழகத்தில் நடைபெறும் ஊராட்சி, வார்டு தேர்தல்களில் பெண்கள், இளைஞர்கள் அதிகளவில் பங்கேற்க வேண்டும் என்றார்.

நெல்லையில் நடந்த கூட்டத்தில் அவர் பேசுகையில்,

கக்கன் தலித் சமூகத்துக்கு மட்டும் தலைவர் அல்ல; இந் நாட்டுக்கே தலைவர். அவர் எளிமையாக வாழ்ந்து காட்டினார். அவர் பணத்தையோ, புகழையோ சேர்க்கவில்லை. அதனால்தான் இன்றும் நாம் அவரைப் புகழ்ந்து பேசுகிறோம். அடுத்தமுறை நான் இங்கு வரும்போது உங்களில் பல கக்கன்களைப் பார்க்க வேண்டும். கக்கன் சிலைக்கு மாலை அணிவிப்பதுடன் திருப்தி அடைந்துவிட்டால், நாம் தோல்வியடைந்து விட்டோம் என்றே பொருள்.

இளைஞர் காங்கிரஸ் முனைப்புடன் செயல்பட்டால், முதுபெரும் தலைவர்களைப் பின்னுக்குத் தள்ள முடியும். அதற்கு நாம் அடிப்படையில் பலமாக வேண்டும். அஸ்திவாரம் பலமாக இருந்தால்தான், ஒரு கட்டடம் பலமானதாக இருக்க முடியும். எனவே நாம் முதலில் கட்சியின் அடிமட்டத்தைப் பலப்படுத்த வேண்டும்.

தமிழகத்தில் பிற கட்சிகளின் கொள்கைகளை நாம் மக்களிடம் எடுத்துச் சென்று கொண்டிருக்கிறோம். அது தவறு. நமது கட்சிக் கொள்கையை மட்டுமே மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும் என்றார்.

திருச்சியில் நடந்த கூட்டத்தில் பேசுகையில்,

அரசியல் மீது தமிழக மக்கள் வெறுப்படைந்துள்ளனர். எனவே, நல்ல தலைவர்களைக் கொடுக்க முடியும் என்ற நம்பிக்கையை மக்களிடம் நாம் ஏற்படுத்த வேண்டும்.

பெண்களுக்கு 33 சத இட ஒதுக்கீடு சட்ட மசோதா மக்களவையில் விரைவில் நிறைவேறவுள்ளது. இந்தச் சட்டம் நிறைவேறினால் தமிழகப் பெண்களுக்கு மட்டுமல்ல தேசிய அளவிலும் பெண்களுக்கு மிகப் பெரிய வாய்ப்பாக அமையும்.

தமிழகத்திற்கு எப்போதாவது வந்துவிட்டு போய்விட மாட்டேன். உங்களைச் சந்திக்க இனி அடிக்கடி வருவேன் என்று பேசினார் ராகுல் காந்தி.

முன்னதாக நெல்லையில் வாசன், இளங்கோவன் கோஷ்டியினர் மோதிக் கொண்டதைப் போல திருப்பூரிலும் கோஷ்டிப் பூசல் வெடித்தது. இதைப் பார்த்து மூத்த காங்கிரஸ்காரர்கள் ராகுல் பயணத்தால் கோஷ்டிப் பூசல்தான் வலுவாகி வருவதாக வருத்தம் தெரிவித்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+