தமிழகத்தில் காங்கிரஸ் தனித்து போட்டியிட தயாரா?-பொன்.ராதாகிருஷ்ணன்
சிவகாசி: காங்கிரஸ் கட்சி தனது சாதனைகளைச் சொல்லி தமிழகத்தில் தனித்து போட்டியிடத் தயாரா என்று பாஜக மாநிலத் தலைவர் பொன்.ராதா கிருஷ்ணன் கேள்வி எழுப்பினார்.
தமிழக பாஜகவின் சார்பில் தாமரை யாத்திரை நடைபெற்று வருகிறது. இந்த யாத்திரையை சிவகாசியை அடைந்ததையடுத்து அங்கு பேசிய ராதாகிருஷ்ணன்,
கடந்த 4 ஆண்டுகளாக இந்து மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்க அரசு மறுத்து வருகிறது. இந்து மாணவர்களுக்கும் கிருஸ்துவ, முஸ்லிம் மாணவர்களுக்கு வழங்குவது போல கல்வி உதவித்தொகை வழங்க வேண்டும். இந்தத் தொகை வழங்கும் வரை போராட்டம் தொடரும். இந்து மாணவர்களுக்கு கிடைக்க வேண்டிய உதவி தொகை கிடைக்க பாஜக மட்டும்தான் போராடி வருகிறது.
இந்து சமுதாய மக்களிடம் பணம் கொடுத்து ஓட்டு வாங்கி விடலாம் என்று சில அரசியல் கட்சிகள் நினைக்கின்றன என்றார்.
பின்னர் நிருபர்களிடம் பேசிய அவர், வெங்காய விளைச்சல் குறைவு என தெரிந்தும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ததால்தான் இந்தியாவில் வெங்காய விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதன்மூலம் அமைச்சர்களுக்கும், அதிகாரிகளுக்கும் சரியான உறவு இல்லை என்பது தெளிவாகிறது.
வரும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் பாஜக தனது சொந்த பலத்தில் சட்டமன்றம் செல்லும். திமுக அரசு வீழ்த்த வேண்டிய அரசாங்கம். இதற்காக அனைத்து எதிர்கட்சிகளும் ஒன்று சேர வேண்டும். இதுவரை யாருடன் கூட்டணி என்று நாங்கள் முடிவெடுக்கவில்லை.
காங்கிரஸ் கட்சி தனது சாதனைகளைச் சொல்லி தமிழகத்தில் தனித்து போட்டியிடத் தயாரா?.
பாஜக ஆட்சி காலத்திலேயே ஸ்பெக்ட்ரம் ஊழல் நடந்திருப்பதாக கூறுவது தேவையற்ற வீண் வாதம் என்றார்.












Click it and Unblock the Notifications