லஷ்கர் தீவிரவாதிகளை விசாரிக்க பாக்.குக்கு கமிஷன் அனுப்ப இந்தியா திட்டம்
டெல்லி: மும்பை தீவிரவாத தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய ஜகியுர் ரஹ்மான் உள்ளிட்ட லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகளை விசாரிக்க அங்கு விசாரணைக் கமிஷனை அனுப்ப இந்தியா திட்டமிட்டு இதுதொடர்பாக பாகிஸ்தானுக்கு கடிதம் எழுதியுள்ளது.
இதுதொடர்பாக அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில், மும்பையில் 166 பேரை பலி கொண்ட தீவிரவாத தாக்குதல் சம்பவத்தை பாகிஸ்தானில் இருந்தபடி ரிமோட் கன்ட்ரோல் போல செயல்பட்டு இயக்கிய முக்கிய தீவிரவாத தலைவர்களின் குரல் மாதிரியை எடுக்க வேண்டியுள்ளது. இதற்காக ஒரு விசாரணைக் கமிஷனை இந்தியா அனுப்ப விரும்புகிறது. இதை பாகிஸ்தான் அனுமதிக்க வேண்டும்.
மேலும் நக்வி உள்ளிட்ட 7 முக்கிய லஷ்கர் தீவிரவாதிகளை விசாரிக்கவும் பாகிஸ்தான் அனுமதிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதாம்.
நக்வி உள்ளிட்டோர் மீது கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பாகிஸ்தான் தீவிரவாத தடுப்புச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது நினைவிருக்கலாம்.
நக்வி தவிர ஜரார் ஷா, அபு அல் காமா ஆகிய இரு முக்கியத் தீவிரவாதிகளையும் விசாரிக்க இந்தியா விரும்புகிறது. இவர்களை தங்களிடம் ஒப்படைக்குமாறு இந்தியா பலமுறை கோரியும் அதை பாகிஸ்தான் கண்டு கொள்ளவில்லை. இதனால்தான் நேரடியாக அங்கு போய் விசாரிக்க இந்தியா தீர்மானித்துள்ளது.












Click it and Unblock the Notifications