இன்னும் போர்க்குணத்தை இழந்திடவில்லை! : திருமாவளவன்
சென்னை: ஈழத்தமிழர்கள் போர்க்களத்தை இழந்தாலும் இன்னும் போர்க்குணத்தை இழக்கவில்லை என்று கூறியுள்ளார் விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல் திருமாவளவன்.
இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
26.12.2010 அன்று தமிழர் இறையாண்மை மாநாட்டை மறைமலைநகரில் நடத்துக்கிறோம்.
ஈழத் தமிழர்களின் ஒரே வேட்கையான தமிழீழ விடுதலையை சர்வதேச சமூகம் அங்கீகரிகக் வேண்டும் என்றும் தமிழீழத்தை மீட்டெடுக்க உலகத் தமிழர்கள் அனைவரும் ஓரணியில் திரள வேண்டும் என்றும் அறைகூவல் விடுக்கிற நோக்கில் நடத்தப்படும் மாநாடே இம்மாநாடாகும்.
இலங்கை தீவில் பூர்வீகமாக வாழ்ந்து வரும் தமிழர்களுக்கென்று ஒரு நாடு வேண்டுமென்ற கோரிக்கையை முன் வைத்து அரை நூற்றாண்டுக் காலம் அறவழியினும் ஆயுதவழியினும் ஈழத்தமிழரக்ள் போராடினர்.
ஆனால் அப்போராட்டத்தின் நியாயத்தையும் ஜனநாயகத்தையும் மூடி மறைத்துவிட்டு பயங்கரவாத முத்திரை குத்தி திட்டமிட்ட ஒடுக்குமுறையால் நசுக்கிவிட்டனர்.
இந்நிலையில் தமிழீழ விடுதலைக்கான அரசியலை அடைகாப்பதும், அக்கருத்தியலை, சர்வதேச சமூகத்திடையே பரப்பிட வேண்டியதும் ஒவ்வொரு தமிழனின் கடமை என்கிற உணர்வோடு விடுதலை சிறுத்தைகள் இம்மாநாட்டை ஒருங்கிணைத்துள்ளது.
இடைக்காலமாக ஈழத்தில் நாம் போர்க்களத்தை இழந்தாலும் இன்னும் போர்க்குணத்தை இழந்திடவில்லையென்பதை உறுதிப்படுத்தும் மாநாடாக இது அமைந்திட வேண்டும்," என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.