மும்பைக்குள் ஊடுறுவிய 4 தீவிரவாதிகள்-தொடர்ந்து தேடுதல் வேட்டை-உஷார் நிலை நீடிப்பு
மும்பை நகருக்குள் பாகிஸ்தானின் லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த 4 தீவிரவாதிகள் ஊடுறுவியுள்ளதாக மத்திய உளவுத்துறை சமீபத்தில் தகவல் வெளியிட்டது. அந்த நான்கு பேரின் புகைப்படங்கள், பெயர் விவரங்களும் வெளியிடப்பட்டன.
இதையடுத்து மும்பை முழுவதும் உச்சகட்ட உஷார் நிலையில் வைக்கப்பட்டது. நான்கு பேரையும் பிடிக்க தேடுதல் வேட்டை முடுக்கி விடப்பட்டது. இருப்பினும் இதுவரை தீவிரவாதிகள் சிக்கவில்லை.
இதையடுத்து நகரம் உச்சகட்ட உஷார் நிலையில் தொடர்ந்து இருக்கும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
தீவிரவாதிகளைக் கண்டுபிடிக்க விடுதிகள், ஹோட்டல்கள், விருந்தினர் இல்லங்கள், ரயில் நிலையங்கள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் தீவிர சோதனை, கண்காணிப்பு, தேடுதல் நடந்து வருகிறது.
அனைத்து ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள் முன்பும் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். என்எஸ்ஜி கமாண்டோப் படையினரும், மும்பையின் அதி விரைவு கமாண்டோப் படையினரும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
தீவிரவாதிகள் குறித்த தகவல் தெரிந்தோர் 022-22633333 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.