அமெரிக்காவில் பயங்கரம்-கொள்ளையர்கள் சுட்டதில் இந்திய மாணவர் பலி
ஹூஸ்டன்: அமெரிக்காவில் வணிக நிறுவனத்தை கொள்ளையடிக்க வந்தவர்கள் சுட்டதில் இந்திய மாணவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
ஆந்திர மாநிலம் விஜயவாடாவைச் சேர்ந்தவர் ஜெயச்சந்திரா எலபொரலு. 22 வயதான இவர் கலிபோர்னியாவின் பாசதீனா என்ற நகரில் படித்து வந்தார். அங்குள்ள ஒரு வணிக நிறுவனத்தில் கிளர்க் ஆக பகுதி நேரமாக பணியாற்றி வந்தார்.
கிறிஸ்துமஸ் தினத்தன்று காலை அங்கு திடீரென கொள்ளையர்கள் துப்பாக்கிகளுடன் புகுந்து கொள்ளையில் ஈடுபட்டனர். அப்போது கண்மூடித்தனமாக அவர்கள் சுட்டதில் ஜெயச்சந்திரா உடலில் ஐந்து குண்டுகள் பாய்ந்து அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
இந்த சம்பவத்தில் 2 பேர் ஈடுபட்டதாக தெரிய வந்துள்ளது. அவர்களைப் போலீஸார் தேடி வருகின்றனர்.
கடந்த ஒரு மாதத்திற்கு முன்புதான் இந்த நிறுவனத்தில் பணியில் சேர்ந்திருந்தார் ஜெயச்சந்திரா. முகமூடி அணிந்தபடி அந்த கொள்ளையர்கள் உள்ளே புகுந்தது ரகசியக் கேமராவில் பதிவாகியுள்ளது. உள்ளூர் நேரப்படி அதிகாலை 2.20 மணிக்கு இச்சம்பவம் நடந்துள்ளது.
கொள்ளையர்கள் உள்ளே புகுந்ததும் பயந்து போன ஜெயச்சந்திரா அங்குள்ள ஒரு சிறிய அறைக்குள் ஓடி பதுங்கியுள்ளார். ஆனால் கதவுக்கு வெளியில் இருந்தபடி சரமாரியாக கொள்ளையர்கள் சுட்டுள்ளனர். இதில் கதவைத் துளைத்துக் கொண்டு உள்ளே பாய்ந்த குண்டுகள் ஜெயச்சந்திராவை துளைத்தெடுத்து விட்டன.
பின்னர் பணப் பெட்டியை எடுத்துக் கொண்டு கொள்ளையர்கள் ஓடி விட்டனர். சம்பவம் நடந்த சில நிமிடங்களுக்குப் பின்னர் கடைக்கு ஒரு பெண் வந்தார். அங்கு பொருட்கள் தாறுமாறாக கிடப்பதையும், ஜெயச்சந்திரா பிணமாக கிடப்பதையும் பார்த்து அவர் போலீஸாருக்குத் தகவல் தெரிவித்து வரவழைத்தார்.