ரேசன் கடைகளில் பொங்கல் பை வழங்குவதைக் கண்காணிக்க குழு!
சென்னை: இந்த ஆண்டு பொங்கலுக்கு வழங்கப்படும் இலவச பொருள்கள் அடங்கிய பைகளை மக்களுக்கு சீராக விநியோகிக்கப்படுகிறதா என்பதைக் கண்காணிக்க மாவட்டந்தோறும் கண்காணிப்புக் குழு அமைக்கப்படுகிறது.
பொங்கல் பண்டிகையையொட்டி ரேஷன் கடைகளில் கார்டுகளுக்கு சர்க்கரை பொங்கல் வைப்பதற்கான பொருட்கள் அடங்கிய இலவச பை வழங்க அரசு முடிவு செய்துள்ளது. இதில் அரிசி, வெல்லம் தலா அரை கிலோ, மற்றும் பாசிபருப்பு, ஏலக்காய், திராட்சை, முந்திரிபருப்பு ஆகியவை இருக்கும்.
இவை மறு சுழற்சி செய்யக்கூடிய உயர்ரக பிளாஸ்டிக் பைகளில் அடைக்கப்பட்டு அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. பொங்கல் பை அனுப்பும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு வருகிற 1-ந்தேதி முதல் ரேஷன் கடைகளில் இலவச சர்க்கரை பொங்கல் பொருட்கள் பை வழங்கப்படுகிறது. முதல்வர் கருணாநிதி 1-ந்தேதி காலை 10 மணிக்கு பல்லாவரத்தில் இலவச சர்க்கரை பொங்கல் பை வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்கிறார். இதன் மூலம் 1 கோடியே 94 லட்சம் குடும்பங்கள் பயன்பெறும்.
இதே மேடையில் பொங்கலுக்கான இலவச வேட்டி- சேலை விநியோகத்தையும் முதல்வர் தொடங்கி வைக்கிறார். இந்த ஆண்டு தமிழ்நாட்டில் 3 கோடியே 17 லட்சம் பேர் இலவச வேட்டி- சேலை பெறுகிறார்கள்.
இலவச பொங்கல் பை வினியோகம் தவறு இல்லாமல் நடைபெறுவதற்காக, மாவட்டந்தோறும் அதிகாரிகள் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில் கூட்டுறவு இணைப் பதிவாளர், மாவட்ட வழங்கல் அதிகாரி உள்ளிட்டவர்கள் இடம் பெற்றுள்ளனர்.
கண்காணிப்பு குழு அதிகாரிகள் ரேஷன் கடைகளுக்கு சென்று பொங்கல் பொருட்கள் வினியோகத்தை கண்காணிப்பார்கள். கூட்டுறவு கடைகள், நுகர்பொருள் வாணிப கழக கடைகள் உள்பட அனைத்து ரேஷன் கடைகளுக்கும் சென்று திடீர் சோதனை நடத்தி பொங்கல் பைகள் குறித்து ஆய்வு நடத்துவார்கள்.
பொங்கல் பைகள் அனைத்து ரேஷன் கடைகளிலும் முறைப்படி விநியோகம் செய்யப்பட வேண்டும். சிறிய தவறு கூட நடைபெறாமல் கண்காணிக்கப்பட வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.
எனவே அதற்கு ஏற்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதிகாரிகளும் உஷார் படுத்தப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications