தேர்தலை கண்டு திமுகவுக்கு பயமே இல்லை: ஸ்டாலின்

திமுக அரசின் சாதனை விளக்கப் பொதுக் கூட்டத்தில் அவர் பேசுகையில்,
1949ம் ஆண்டில் தொடங்கப்பட்ட திமுக 1957ல் தான் முதன்முதலில் தேர்தலில் களமிறங்கியது. பின்னர் 1967ல் அண்ணா தலைமையில் ஆட்சியைக் கைப்பற்றியது. அண்ணாவின் மறைவுக்குப் பிறகு 1969ல் முதல்வராக கருணாநிதி பொறுப்பேற்றார். இதைத் தொடர்ந்து 1971, 1976, 1989, 1996, 2006 ஆண்டுகளில் தேர்தல்களில் வென்று கருணாநிதி முதல்வராகப் பொறுப்பேற்றுள்ளார்.
அதிக முறை வெற்றி, தோல்வியைக் கண்ட ஒரே கட்சி திமுகதான். ஆட்சிக்கு வந்தபோதெல்லாம் மக்களுக்காக எண்ணற்ற திட்டங்கள் நிறைவேற்றிய கட்சியும் திமுக தான்.
ஆனால், அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் திமுக ஆட்சியின் திட்டங்கள் நிறுத்தப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது.
கடந்த நான்கரை ஆண்டு கால திமுக ஆட்சியில் கலைஞர் காப்பீட்டு திட்டம், கலைஞர் வீடு வழங்கும் திட்டம், ரூ. 1க்கு ஒரு கிலோ அரிசி வழங்கும் திட்டம் உள்ளிட்ட பல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அடுத்தமுறை அதிமுக ஆட்சிக்கு வந்துவிட்டால் இதுபோன்ற மக்கள் நலத்திட்டங்கள் நிறுத்தப்பட்டுவிடும்.
"அதிமுக ஆட்சிக்கு வந்தால், கலைஞர் வீடு வழங்கும் திட்டம் நிறுத்தப்படமாட்டாது. வேண்டுமானால் பத்திரத்தில் எழுதித் தருகிறோம்' என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன், அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு வக்காலத்து வாங்கியிருக்கிறார்.
1989ம் ஆண்டில் திமுக அரசு கொண்டுவந்த திருமண உதவித் திட்டத்தை 1991ல் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா நிறுத்தினார். அதேபோல 1996ல் திமுக அரசு செயல்படுத்திய சத்துணவுத் திட்டம், சமத்துவபுர திட்டம் உள்ளிட்டவற்றையும் 2001ல் ஜெயலலிதா நிறுத்தினார். அடுத்தமுறை ஆட்சிக்கு வந்தால் திமுக அரசின் திட்டங்களை ஜெயலலிதா நிறுத்தமாட்டார் என்று பாண்டியன் கூறுவதை மக்கள் எப்படி நம்ப முடியும்?.
இன்னும் 3 அல்லது 5 மாதங்களுக்குள் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தல் நேரம் நெருங்கும்போது மக்கள் கேள்வியை எப்படி எதிர்கொள்ளப் போகிறோமோ என்று ஆளும்க ட்சி எம்.எல்.ஏக்கள் பயப்படுவது வழக்கம். ஆனால், இந்த முறை திமுக எம்.எல்.ஏக்களுக்கு அந்த பயம் இல்லை.
அரசின் நலத்திட்டங்களில் மக்கள் திருப்பதி அடைந்துள்ளதுதான் இதற்குக் காரணம் என்றார்.
முன்னதாக அரூர் அரசு மருத்துவமனை எதிரில் ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டத்தின்கீழ், அரூர் பேரூராட்சிக்கு பாதுகாக்கப்பட்ட காவிரி குடிநீர் வழங்குவதற்காக 1 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட சமநிலை- மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டும் பணியை ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
அப்போது நிருபர்களிடம் அவர் கூறியதாவது: தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட காவிரி குடிநீர் வழங்கும் வகையில் ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டம் ரூ.1928 கோடி செலவில் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.
இந்த திட்டம் 5 தொகுப்புகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் முதல் தொகுப்பு பணி ஏற்கனவே தொடங்கப்பட்டு முழுவீச்சில் நடந்து வருகிறது. இந்த முதல் தொகுப்பு பணி வருகிற 2012ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் நிறைவடையும். இதில் தற்போது 15 சதவீத பணிகள் முடிவடைந்து விட்டன. இதே போல் 2ம் தொகுப்பு பணிகளும் தொடங்கி நடந்து வருகின்றன. இந்தப் பணிகள் 2012 ஜுன் மாதம் நிறைவடையும். இந்தத் திட்டத்தின் 4ம் தொகுப்பு பணிகள் 2012 செப்டம்பர் மாதத்தில் முடிவடையும்.
ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்ட அனைத்துப்பணிகளும் திட்டமிட்ட காலத்திற்கு முன்னதாக நிறைவடையும் வகையில் பணிகள் வேகப்படுத்தப்பட்டுள்ளன. வருகிற 2012ம் ஆண்டு டிசம்பர் மாதத்துக்குள் அனைத்து பணிகளும் நிறைவடையும். இதுவரை இந்த திட்டத்தில் ரூ.175 கோடி செலவிடப்பட்டுள்ளது.
இந்த திட்டம் முழுவீச்சில் நடைபெறவில்லை, திட்டப்பணிகள் குறித்த காலத்தில் நிறைவேறாது என்று குறை கூறுபவர்கள் அரசியலுக்காக அது போல் கூறி வருகிறார்கள். குறை கூறுபவர்கள் விரும்பினால் திட்டப் பணிகளை நேரில் வந்து பார்த்து தெரிந்து கொள்ளலாம் என்று நான் ஏற்கனவே கூறி இருக்கிறேன். இப்போதும் அதையே கூறுகிறேன்.
நான் கூறும் நேரத்தில் மட்டுமல்ல அவர்கள் கூறும் நேரத்தில் கூட நான் அவர்களுக்கு திட்டப் பணிகள் விரைவாக நடைபெற்று வருவதை நேரி்ல் காட்ட தயாராக இருக்கிறேன் என்றார்.












Click it and Unblock the Notifications