கிரீடம் செய்ய வசூலித்த நன்கொடையில் மோசடி-காளஹஸ்தி கோவில் நிர்வாக அதிகாரிக்கு பிடிவாரண்ட்
காளஹஸ்தி: ஆந்திர மாநிலம் காளஹஸ்தி கோவிலில் உள்ள ஞானபிரசுனாம்பிகா தாயாருக்கு வைர கிரீடம் செய்ய பணம் வசூலித்ததில் மோசடி செய்த கோவில் நிர்வாக அதிகாரிக்கு ஹைதராபாத் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.
காலஹஸ்தியில் பிரசித்தி பெற்ற சிவன்கோவில் உள்ளது. இங்குள்ள ஞானபிரசுனாம்பிகா தாயாருக்கு வைர கிரீடம் செய்ய பக்தர்களிடம் இருந்து ரூ. 29 கோடி வசூலிக்கப்பட்டது. இந்த பணத்தைக் கொண்டு வைர கிரீடம் செய்யப்பட்டது.
இதற்கிடையே பக்தர்களிடம் இருந்து வசூலிக்கப்பட்ட பணத்திற்கு ரசீது கொடுக்காமல் கோவில் நிர்வாக அதிகாரி ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி மோசடி செய்ததாக புகார் வந்தது.
இநத மோசடி குறித்து சுதர்சன ரெட்டி என்பவர் ஹைதராபாத் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவர் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது,
நான் ஞானபிரசுனாம்பிகா தாயாருக்கு வைர கிரீடம் செய்ய நன்கொடை அளித்தேன். ஆனால் அதற்கான ரசீது எனக்கு வழங்கப்படவில்லை. என்னைப் போன்று பலருக்கும் ரசீது வழங்காமல் மோசடி நடந்துள்ளது என்று அதில் கூறியிருந்தது.
மேலும், சுதர்சனரெட்டி தான் நன்கொடை கொடுத்ததற்கான வீடியோ உள்ளிட்ட ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்பித்துள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கோவில் நிர்வாக அதிகாரி ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பினார். அவர் ஆஜராகததையடுத்து அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications