ஆந்திர முன்னாள் முதல்வர் ரோசய்யா மீது நில மோசடி வழக்குப் பதிவு
ஹைதராபாத்: ரூ. 200 கோடி மதிப்புள்ள அரசு நிலத்தை தனியார் ஒருவருக்கு முறைகேடாக ஒதுக்கியது தொடர்பான வழக்கில் ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் ரோசய்யா சிக்கியுள்ளார். அவர் மீது இன்று ஊழல் தடுப்புப் போலீஸார், நில மோசடி வழக்குப் பதிவு செய்தனர். அவர் உள்பட மொத்தம் 16 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஒரு தனியார் நிறுவனத்திற்கு அரசுக்குச் சொந்தமான ரூ. 200 கோடி நிலத்தை ஒதுக்கீடு செய்ததில்தான் இந்த ஊழல் நடந்துள்ளது. மறைந்த ராஜசேகர ரெட்டி முதல்வராக இருந்தபோது இந்தத் திட்டத்தை நிராகரித்து விட்டார். ஆனால் அவர் மறைவுக்குப் பின்னர், ரோசய்யா முதல்வராக இருந்தபோது இந்தத் திட்டம் ஒப்புதல் பெறப்பட்டு நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இந்த நில ஒதுக்கீடு ஏற்கப்பட வேண்டியதில்லை என்று ரெட்டி அழுத்தமான குறிப்பையும் விட்டு வைத்திருந்தார். ஆனால் அதை புறக்கணித்து விட்டு நிலத்தை ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளார் ரோசய்யா.
இதுகுறித்து கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த கோர்ட், ரோசய்யா உள்ளிட்ட 16 பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்துமாறு நேற்று உத்தரவிட்டது. இதையடுத்து இன்று வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த நில ஊழலில் ரோசய்யாவின் கையெழுத்து மோசடியாகப் போடப்பட்டுள்ளதாக ஊழல் தடுப்புப் பிரிவு கருதுகிறது. முதல்வர் அலுவலகத்திற்கு வெளியே ஒரு இடத்தில் வைத்து இந்த மோசடியான உத்தரவுகள் தயாரிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து முக்கியமாக விசாரிக்கப்படவுள்ளது.












Click it and Unblock the Notifications