ரெட்டியார்பட்டி ஆவின் பால் பண்ணையில் வெடிகுண்டு ஒத்திகையால் பரபரப்பு
நெல்லை: ரெட்டியார்பட்டி ஆவின் பால் பண்ணையில் போலீசார் நடத்திய வெடிகுண்டு ஒத்திகையால் பரபரப்பு ஏற்பட்டது.
பாளையங்கோட்டை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று பிற்பகல் 3 மணிக்கு ரெட்டியார்பட்டி ஆவின் பால் பண்ணை அதிகாரிகள் அறையில் வெடிகுண்டு இருப்பதாக மர்ம போன் வந்தது.
இதையடுத்து போலீ்ஸ் அதிகாரிகள் தலைமையில் வெடிகுண்டு சோதனை பிரிவு, நுண்ணறிவு பிரிவு, ஆயுதப்படை போலீசார் அங்கு குவிந்தனர். ஆவின் ஊழியர்கள் அலுவலகம், பொது மேலாளர் அலுவலகம் ஆகியவற்றில் இருந்த பணியாளர்களை வெளியேற்றிவிட்டு போலீசார் வெடிகுண்டு சோதனை நடத்தினர். ஆவின் வளாகம் முழுவதும் ஆயுதப்படை போலீசார் குவிக்கப்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இச்சோதனைக்கு பின்னர் மாநகர போலீஸ் கமிஷனர் அவினாஷ்குமார் கூறுகையில்,
பிற்பகல் அனைவரும உணவு அருந்தி விட்டு சற்று இளைப்பாறும் வேளையில் குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தால் போலீசார் விழிப்புணர்வுடன் செயல்படுகிறார்களா என பரிசோதிக்க இந்த ஒத்திகை நடந்தது. இதற்காக மாநகரின் எல்லையான ரெட்டியார்பட்டி ஆவினை தேர்வு செய்தோம்.
போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் சென்ற அடுத்த 10வது நிமிடத்தில் வெடிகுண்டு சோதனை பிரிவும், போலீசாரும் சம்பவ இடத்துக்கு வந்துள்ளனர். மேலும் தீயணைப்பு வாகனமும், ஆம்புலன்சும் உடனடியாக களத்துக்கு வந்துள்ளது. ஆவின் நிர்வாக ஊழியர்களும் பெரும் ஒத்துழைப்பு அளித்தனர் என்றார்.