ராடியாவின் தமிழகத் தொடர்புகள் தீவிரமாக விசாரிக்கப்பட வேண்டும்-செ.கு.தமிழரசன்
வேலூர்: நீரா ராடியாவுக்கும், மதிழகத்தில் உள்ள சிலருக்கும் உள்ள தொடர்புகள் குறித்து தீவிரமாக விசாரிக்கப்பட வேண்டும் என்று இந்திய குடியரசுக் கட்சித் தலைவர் செ.கு.தமிழரசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் ஆ. ராசாவைக் காப்பாற்ற கருணாநிதி முயற்சிக்கிறார். இது ராசா தலித் என்பதற்காக அல்ல. தலித் மீது அவருக்கு அக்கறை இருக்குமானால் தலைமைச் செயலர், உள்துறைச் செயலர் உள்ளிட்ட பதவிகளுக்கு 220 ஐஏஎஸ் அதிகாரிகளில் ஒருவர் கூட கிடைக்கவில்லையா? பணம் சம்பாதித்துக் கொடுப்பவர்தான் அவருக்கு தலித்தா?
முதல்வர் குடும்பத்துடன் நீரா ராடியாவுக்குத் தொடர்பு இருப்பது அவரது தொலைபேசி உரையாடல் மூலம் தெளிவாகியுள்ளது. அதனால் முதல்வர் மற்றும் அவரது குடும்பத்தினரை சிபிஐ விசாரிக்க வேண்டும். அப்போதுதான் ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் முழு உண்மையும் வெளிப்படும்.
திமுகவின் கவர்ச்சி திட்டங்கள் மக்களிடம் எடுபடவில்லை. இத்திட்டங்கள் மூலம் மக்கள் பயனடையவில்லை. ஆளும் கட்சிக்காரர்களும், இடைத்தரகர்களுமே பயனடைந்து வருகின்றனர்.
அரசு ஊழியர்கள் இன்றைக்கு சுதந்திரமாகச் செயல்பட முடியவில்லை. ஆளும் கட்சிக்கு சாதகமாக இருந்தால் மட்டுமே செயல்பட முடியும் என்ற அளவுக்கு அவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பாலாறு பாழாறாகி விட்டது. பாலாற்றில் மணல் எடுப்பதை உடனடியாகத் தடுத்து நிறுத்தாவிடில், ராமநாதபுரத்தைப் போன்று வறண்ட பூமியாக வேலூர் மாவட்டம் மாறும்.
அதிமுக கூட்டணி இன்றைக்கு மக்கள் கூட்டணி மட்டுமல்ல; வலுவான கூட்டணி. ஊழல் பிடியில் இருந்து மாநிலத்தைக் காப்பாற்ற வேண்டுமெனில் அதிமுகதான் ஆட்சிக்கு வர வேண்டும் என அனைத்துத் தரப்பு மக்களும் முடிவெடுத்து விட்டனர் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications