சிறுமி ஆருஷி கொலை வழக்கு-மறு விசாரணைக்கு உத்தரவிட சிபிஐ கோர்ட் மறுப்பு

2008ம் ஆண்டு மே மாதம் 15ம் தேதி நள்ளிரவில் தனது வீட்டில் பிணமாகக் கிடந்தார் ஆருஷி. அவர் கொலை செய்யப்பட்டது விசாரணையில் தெரிய வந்தது. இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வந்தது. முதலில் ஆருஷியின் தந்தை ராஜேஷ் தல்வார் மீது சந்தேகம் எழுந்தது. பின்னர் வீட்டு வேலையாட்கள் மீது சந்தேகம் எழுந்தது.
ஆனால் இறுதியில் இந்த வழக்கில் போதிய ஆதாரம் கிடைக்கவில்லை என்று கூறி சமீபத்தில் வழக்கை மூட முடிவு செய்த சிபிஐ இதுதொடர்பான அறிக்கையையும் சிபிஐ கோர்ட்டில் தாக்கல் செய்தது.
சிபிஐயின் இந்த முடிவுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். குறிப்பாக லோக்சபா சபாநாயகர் மீரா குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் இன்று சிபிஐ தாக்கல் செய்த அறிக்கை காஸியாபாத் சிபிஐ கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது ராஜேஷ் தல்வார் சார்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், மறு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.
அவர் தாக்கல் செய்த மனுவில், ஆருஷியின் துரதிர்ஷ்டம் பிடித்த தந்தை நான். எனது மகள் 2008ம் ஆண்டு 15ம் தேதி நள்ளிரவில் கொலை செய்யப்பட்டாள்.
இது மிகப் பெரிய கொடுமை, குற்றச் செயல். ஆனால் இந்த வழக்கை துப்பு துலக்காமல், குற்றம் இழைத்தவர்களைக் கண்டுபிடிக்க முயலாமல் வழக்கை மூடப் பார்க்கிறது சிபிஐ. இதை அனுமதிக்கக் கூடாது. மறு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.
இருப்பினும் அவரது கோரிக்கையை கோர்ட் நிராகரித்து விட்டது. சிபிஐயின் வழக்கை மூடும் முடிவு தொடர்பான அறிக்கையை எதிர்ப்பதில் அவசரம் காட்டக் கூடாது என்று கோர்ட் தெரிவித்துள்ளது.
அதேசமயம், சிபிஐயின் அறிக்கையைப் பதிவு செய்து கொண்ட சிபிஐ கோர்ட், வழக்கை மூட ஏன் சிபிஐ அவசரம் காட்டுகிறது என்றும் கேள்வி எழுப்பியுள்ளது.
இந்த வழக்கு ஜனவரி 7ம் தேதி மீண்டும் விசாரிக்கப்படும் என்று கூறிய சிபிஐ அன்றைய தேதிக்கு விசாரணையை ஒத்தி வைத்துள்ளது.












Click it and Unblock the Notifications