ஜன. 12ல் சென்னை சங்கமம் கலை விழா தொடக்கம்-கனிமொழி
சென்னை: சமீபத்திய சிபிஐ சோதனைகளால் சற்றும் மனம் தளராத தமிழ் மையம் அமைப்பு, தமிழக அரசின் சுற்றுலாத்துறையுடன் இணைந்து ஆண்டு தோறும் நடத்தி வரும் சென்னை சங்கமம் நிகழ்ச்சிக்குத் தயாராகி விட்டது.
ஜனவரி 12ம் தேதி முதல்வர் கருணாநிதி இந்த 6 நாள் கலை விழாவை தீவுத் திடலில் தொடங்கி வைக்கிறார். இதை முதல்வரின் மகளும், திமுக எம்.பியும், தமிழ் மையத்துடன் இணைந்து சென்னை சங்கமத்தை நடத்தி வருபவருமான கனிமொழி செய்தியாளர்களிடம் தேரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், 5வது சென்னை சங்கமம் கலை மற்றும் கிராமியக் கலைகள் விழா ஜனவரி 12ம் தேதி தொடங்கும். 17ம் தேதி வரை இது நடைபெறும்.
12ம் தேதி தீவுத் திடலில் நடைபெறும் நிகழ்ச்சியில் முதல்வர் கருணாநிதி விழாவைத் தொடங்கி வைப்பார்.
நாட்டின் மிகப் பெரிய வெளிப்புற கலை விழா என்ற பெருமையை சென்னை சங்கமம் பெற்றுள்ளது.
சமீபத்திய சிபிஐ சோதனைகளால் தமிழ் மையத்திற்கு எந்த அகவுரமும் ஏற்படவில்லை. இந்தக் கலை விழா மிகப் பிரமாண்டமானதாக அமையும்.
இந்த கலை நிகழ்ச்சிக்கு நிதியுதவி வழங்கக் கோரி (ஸ்பான்சர்) 2000 பேருக்குக் கடிதம் எழுதியுள்ளோம். நாங்கள் கலை நிகழ்ச்சியை மட்டுமே நடத்துகிறோம். இதில் பங்கேற்கும் நாட்டுப்புற கலைஞர்களுக்கு அரசு ஊதியத்தை வழங்குகிறது.
கடந்த நான்கு ஆண்டுகளாக சென்னை சங்கமம் நிகழ்ச்சி சென்னை மக்களுக்கு பொங்கல் பண்டிகையின்போது பெரும் மன மகிழ்ச்சியையும், சந்தோஷத்தையும் அளித்தது. அதேபோல இந்த ஆண்டும் சிறப்பான முறையில் விழா நடைபெறும்.
நாட்டுப்புற கலைகளுக்கு அதிக முக்கியத்துவம் இருக்கும் அதே நேரத்தில் கர்நாடக இசைக் கலைஞர்களுக்கும் உரிய முக்கியத்துவம் அளிக்கப்படும்.
விழாவின் நிறைவு நிகழ்ச்சி ஜனவரி 17ம் தேதி பெசன்ட் நகரில் உள்ள எலியாட்ஸ் கடற்கரையில் நடைபெறும் என்றார்.
பேட்டியின்போது உடன் இருந்த ஜெகத் கஸ்பார் ராஜ் கூறுகையில், இதே போன்ற விழாக்களை ஈரோடு, திருப்பூர், கன்னியாகுமரி மாவட்டங்களிலும் நடத்த தமிழ் மையம் திட்டமிட்டு வருகிறது. கோவையில் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டின்போது இதை நடத்தினோம். அதேபோல தங்களது பகுதிகளில் நடத்த யாரேனும் விரும்பி முன்வந்தால் அதை பரிசீலிப்போம்.
இந்த ஆண்டுக்கான சென்னை சங்கமம் நிகழ்ச்சிக்கு ரூ. 4 கோடி வரை செலவாகும் என கணக்கிடப்பட்டுள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications