காஷ்மீர் பிரிவினைவாத தலைவர்களைக் கொன்றது தீவிரவாதிகளே-ஹூரியத் தலைவர் அப்துல் கனி
ஸ்ரீநகர்: காஷ்மீரில் பிரிவினைவாத தலைவர்கள் சிலரைக் கொன்றது ராணுவம் அல்ல, மாறாக தீவிரிவாதிகளே இதற்குக் காரணம் என்று கூறியுள்ளார் முக்கிய பிரிவினைவாத தலைவரும், ஹூரியத் மாநாட்டுக் கட்சியின் முன்னாள் தலைவருமான அப்துல் கனி பட்.
அப்துல் கனி லோனே, மீர்வைஸ் மெளலவி பரூக் ஆகிய முக்கிய பிரிவினைவாத தலைவர்களைக் கொன்றது தீவிரவாதிகள்தான், ராணுவம் அல்ல என்று பட் தெரிவித்துள்ளார். இதனால் பெரும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
காஷ்மீரைச் சேர்ந்த பிரிவினைவாத அமைப்பு ஒன்றின் மூத்த தலைவர் தீவிரவாதிகள் மீது குற்றம் சாட்டியிருப்பது இதுவே முதல் முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து பட் கூறுகையில், ஒருவரைக் கொல்வது என்பது மிகவும் கொடுமையானது. ஒரு கொலைக்கு எந்தவகையிலும் நியாயம் கற்பிக்க முடியாது. அதிலும் அப்பாவிகளைக் கொல்வது என்பது மன்னிக்க முடியாத குற்றமாகும்.
அப்துல் ஹத்வானி, மெளலானா முகம்மது பரூக், அப்துல் கனி லோனே ஆகியோர் ராணுவத்தால் கொல்லப்படவில்லை, நமது மக்களே அவர்களைக் கொன்றுள்ளனர். இது எனக்குத் தெரியும்.
காஷ்மீரில் நிலை கொண்டுள்ள இந்திய ராணுவம் பரிசுத்தமானது என்று நான் கூற மாட்டேன். அவர்கள் மக்களைக் கொன்று வருகின்றனர். ஆனால் நமது மக்களே, நம்மில் சிலரைக் கொல்வது ஏற்க முடியாது. அதைத்தான் நான் கூற வருகிறேன். உண்மையைச் சொல்வதற்காக நான் கூட கொல்லப்படக் கூடும். ஆனால் உண்மையைச் சொல்ல நான் அஞ்சவில்லை.
எனது சகோதரரையும் கூட எமது மக்களில் சிலரேக் கொன்றனர். இதுதான் உண்மை. இதைச் சொல்ல நான் பயப்படவில்லை. இதற்காக என்னைக் கொன்றால் அதையும் நான் வரவேற்பேன் என்றார் அவர்.
மீர்வைஸ் பரூக் 1991ம் ஆண்டும், லோனே 2002ம் ஆண்டிலும் கொல்லப்பட்டனர். இருவரும் காஷ்மீரில் அமைதியை ஏற்படுத்துவதற்காக கடுமையாக முயன்று வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications