6 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் வீரபாண்டி ஆறுமுகம் உறவினருக்கு ஜாமீன்
சென்னை: சேலத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் வேளாண் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் உறவினர் சுரேஷ் குமாருக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.
சேலத்தில், ஓய்வு பெற்ற இன்ஸ்பெக்டர் குப்புராஜ் மற்றும் 5 பேர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12ம்தேதி கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டனர். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில் குப்புராஜின் மகன் சிவகுரு சென்னையில் கோர்ட்டில் சரணடைந்தார்.
அதன் பின்னர் சிபிசிஐடி போலீஸார் நடத்திய தீவிர விசாரணையில், வீரபாண்டி ஆறுமுகத்தின் உறவினரான சுரேஷ் குமார் சிக்கினார். அவரை போலீஸார் கடந்த ஆண்டு அக்டோபர் 20ம் தேதி கைது செய்தனர். கொலைக்கு இவர் தூண்டுதலாக இருந்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சுரேஷ் குமார் ஜாமீன் கோரி சேலம் மாவட்ட நீதிமன்றத்தில் மனு செய்தார். அது நிராகரிக்கப்பட்டு விட்டது. இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அவர் மனு தாக்கல் செய்தார்.
மனுவை விசாரித்த நீதிபதி அருணா ஜெகதீசன்,
இந்த வழக்கில் சுரேஷ்குமார் மீதான குற்றச்சாட்டுகளைத் தவிர, அவற்றை நிரூபிப்பதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை. மேலும், அவர் கடந்த 20.10.2010 முதல் சிறையில் இருந்து வருகிறார். இவற்றைக் கருத்தில்கொண்டு, அவரை நிபந்தனை ஜாமீனில் வெளியே விட இந்த நீதிமன்றம் முடிவு செய்கிறது.
சுரேஷ் குமார், சேலம் நான்காவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ரூ. 10 ஆயிரத்துக்கு பிணையப் பத்திரம் தர வேண்டும். இந்த வழக்கில் மறு உத்தரவு வரும் வரை அவர் திருச்சியில் தங்கியிருந்து முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் தினமும் கையெழுத்திட வேண்டும் நிபந்தனை விதித்து ஜாமீன் அளித்து உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications