ஒய்எஸ்ஆர் கட்சி-தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பித்தார் ஜெகன் மோகன் ரெட்டி
ஜெகன் மோகன் ரெட்டியின் நெருங்கிய உறவினரான ஒய்.வி.சுப்பா ரெட்டி இந்த மனுவை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்தார்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் காங்கிரஸ் கட்சியை விட்டு விலகினார் ஜெகன் மோகன் ரெட்டி. அவரது சாக்ஷி டிவியில் சோனியா காந்தி குறித்தும், பிரதமர், ராகுல் காந்தி ஆகியோர் குறித்தும் அவதூறாக செய்திகள் வெளியானதைத் தொடர்நது காங்கிரஸில் கொதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர் மீது காங்கிரஸ் மேலிடம் நடவடிக்கை எடுக்க முடிவு செய்தது. ஆனால் அதற்கு இடம் தராமல் விலகி விட்டார் ஜெகன். அவரது தாயார் விஜயலட்சுமியும் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார்.
இதையடுத்து அவர் புதுக் கட்சி தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் இன்று புதுக் கட்சியைப் பதிவு செய்வதற்கான விண்ணப்பத்தை அளித்துள்ளார் ஜெகன் மோகன் ரெட்டி.
டெல்லியில் 11ம் தேதி உண்ணாவிரதம்:
இதற்கிடையே, விவசாயிகளுக்காக டெல்லியில் போய் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்துள்ளார் ஜெகன் மோகன் ரெட்டி.
காங்கிரஸ் மேலிடத்துடன் ஏற்பட்ட மோதலால் பதவியை ராஜினாமா செய்து, கட்சியில் இருந்து விலகிய ஜெகன் தற்போது தனிப் பெரும் பலத்துடன் பவனி வருகிறார். ஆந்திராவில் கடந்த ஆண்டு இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் கேட்டு சில தினங்களுக்கு முன் ஜெகன் 2 நாட்கள் உண்ணாவிரதம் இருந்தார்.
அவருக்கு முன்பாக சந்திரபாபு நாயுடு தொடர் உண்ணாவிரதத்தில் குதித்து, உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பின்னர் போராட்டத்தைக் கைவிட்டார்.
இந்த நிலையில் ஜெகன் மோகன் மறுபடியும் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்துள்ளார். விவசாயிகளை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக விசாகப்பட்டினத்தில் இருந்து நேற்று முன்தினம் ஆறுதல் யாத்திரை தொடங்கினார்.
10 நாட்கள் தொடரும் இந்த யாத்திரையின்போது அவர் 18 விவசாய குடும்பங்களைச் சந்தித்து பேசுகிறார். விவசாயிகளுக்காக போராடுவதாக கூறும் அவர் கடந்த வாரம் மத்திய வேளாண்துறை அமைச்சர் சரத்பவாரை நேரில் சந்தித்து இந்த பிரச்சனை குறித்து பேசினார்.
இந்நிலையில் வரும் 11-ம் தேதி தலைநகர் டெல்லியில் விவசாயிகளுக்காக ஒரு நாள் உண்ணாவிரதம் இருக்கவிருப்பதாக அவர் அறிவித்துள்ளார். இந்த உண்ணாவிரதத்தில் அவருக்கு ஆதரவாக இருக்கும் எம்.பி.க்களும், எம்.எல்.ஏ.க்களும் கலந்து கொள்வார்கள் என்று அவர் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே ஜெகனின் ஆறுதல் யாத்திரையால் ஆந்திராவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே இந்த 1 நாள் உண்ணாவிரதம் மேலும் பரபரப்பை அதிகரித்துள்ளது.