லஞ்சம் வாங்கும் கேரள போலீசாருக்கு 7 வருட சிறை: கலக்கத்தில் காவல் துறை
திருவனந்தபுரம்: கேரளாவில் லஞ்சம் வாங்கும் போலீசாருக்கு 7 வருட சிறை தண்டனையும், 12 மாத சம்பளத்திற்கு இணையான அபராதமும் விதிக்கும் வகையில் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது.
கேரள சட்டசபையில் நேற்று போலீஸ் மசோதாவை உள்துறை அமைச்சர் கொடியேறி பாலகிருஷ்ணன் தாக்கல் செய்தார். அதில் குறிப்பிட்டுள்ள சில முக்கிய அம்சங்கள் வருமாறு,
பணியில் இருக்கும் அனைத்து போலீஸ் அதிகாரிகளும் பொதுமக்களிடம் மரியாதையாக பழக வேண்டும். கஸ்டடியில் இருக்கும் கைதிகளின் புகைப்படங்கள், செய்திகளை பத்திரிகையாளர்களுக்குக் கொடுக்க கூடாது. அவர்கள் செலவுக்கு தினக்கூலியில் பாதி கொடுக்க வேண்டும். இதற்கான தொகையை ஒவ்வொரு காவல் நிலையத்துக்கும் அரசு வழங்கும்.
பெண்களிடம் மரியாதையாக நடந்து கொள்ள வேண்டும். குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் ஆகிய சாட்சிகளை காவல் நிலையத்துக்கு வரவழைக்கக் கூடாது. பொது இடங்களில் பெண்களை அவமதிக்கும் வகையில் ஆபாசமாக நடப்பவர்கள், புகைப்படம், வீடியோ எடுப்பவர்களுக்கு 3 வருட சிறை மற்றும் ரூ.1000 அபராதம் விதிக்கப்படும்.
அதிகாரிகள் தங்கள் கீழ் பணிபுரியும் போலீசாரிடம் வீ்ட்டு வேலைகள் செய்யுமாறு பணிக்கக் கூடாது. போலீசார் லஞ்சம் வாங்கினால் 7 வருட சிறை தண்டனையும், 12 மாத சம்பளத்திற்கு இணையான அபராதமும் விதிக்கப்படும்.
பொது இடங்களில் சிறு நீர், மலம் கழிப்பவர்களுக்கு ஒரு வருட சிறை, ரூ.5 ஆயிரம் அபராதம், பொது இடங்களில் வாகனங்களை கழுவினாலோ, மிருகங்களை கொன்றாலோ அல்லது வளர்ப்பு மிருகங்களை அவிழ்த்து விட்டாலோ தண்டனை வழங்கப்படும். போலி ஆவணங்கள் மூலம் வழக்கு பதிவு செய்யும் போலீசாருக்கு 3 வருட சிறையும், அபராதமும் விதிக்கப்படும். இந்த சட்ட மசோதா நேற்று கேரள சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.












Click it and Unblock the Notifications