ஜெயலலிதாவின் அறிக்கை 'பொய்க்குளியின் புளுகு மூட்டை': கே.என்.நேரு
சென்னை: டீசல் இல்லாமல் அரசுப் பேருந்துகள் ஓடாமல் நிற்பதாக ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை, 'பொய்க்குளியின் புளுகு மூட்டை' என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் கே.என்.நேரு கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறக்கையில், போக்குவரத்து துறையிலே டீசலுக்கு பணம் இல்லை என்றும், அரசுப் பேருந்துகள் ஓடாமல் நிற்பதாகவும் கற்பனையை வார்த்தையாக்கி ஜெயலலிதா அறிக்கை விட்டுள்ளார்.
இது முற்றிலும் தவறான தகவல். அனைத்து போக்குவரத்து கழகங்களிலும் வழக்கமான நடைமுறைப்படி 2 நாட்களுக்கு தேவையான டீசல் கையிருப்பில் உள்ளது. டீசல் இல்லாமல் பேருந்துகள் ஓடாமல் நிற்கின்றன என்ற ஜெயலலிதாவின் அறிக்கை எப்போதும்போல் பொய்க்குளியின் புளுகு மூட்டை.
ஜெயலலிதா ஆட்சியில் 16,392 பேருந்துகள் இயக்கப்பட்டது. தற்போது முதல்வர் கருணாநிதி ஆட்சியில் 20,733 பேருந்துகள் அன்றாடம் இயக்கப்படுகிறது. இந்த லட்சணத்தில் ஜெயலலிதாவுக்கு அறிக்கைவிட என்ன யோக்கியதை இருக்கிறது.
ஜெயலலிதா ஆட்சியில் போக்குவரத்து துறை எப்படி செயல்பட்டது, தற்போது எப்படி செயல்படுகிறது என்பதற்கு அண்மையில் நடைபெற்ற தொழிற்சங்கத் தேர்தலில் திமுக பெற்ற வெற்றியும், அதிமுக 3வது இடத்திற்கு போனதையும் ஜெயலலிதா மறந்து விட்டாரா?.
ஜெயலலிதாவின் அறிக்கைக்கு முதல்வர் கருணாநிதியும், துணை முதல்வர் மு.க.ஸ்டாலினும் கேள்வி எழுப்பி வாரக்கணக்கில் ஆகியும் பதில் சொல்ல முடியாத ஜெயலலிதாவுக்கு அறிக்கை ஒரு கேடா?.
இவ்வாறு நேரு தனது அறிக்கையில் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications