தெலுங்கானாவைத் தவிர வேறு எந்த தீர்வையும் ஏற்க மாட்டோம்-சந்திரசேகர ராவ்

மேலும், ஹைதராபாத்தை தலைநகராகக் கொண்ட தெலுங்கானாவை மட்டுமே ஏற்போம் என்றும் அவர் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீகிருஷ்ணா கமிட்டியின் பரிந்துரை இன்று வெளியிடப்பட்டது. அதில் ஒருங்கிணைந்த ஆந்திராவே தொடர்வது, தெலுங்கானா-சீமாந்திரா என்ற இரு மாநிலங்களாகப் பிரிப்பது உள்பட 6 பரிந்துரைகள் வைக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து ராவ் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், தெலுங்கானா தனி மாநிலம் வேண்டும் அதன் தலைநகரமாக ஹைதராபாத் விளங்க வேண்டும். இது மட்டுமே எங்களது ஒரே கோரிக்கை. இதற்குக் குறைவான எந்தத் தீர்வையும் நாங்கள் ஏற்க மாட்டோம். ஒட்டுமொத்த தெலுங்கானா மக்களின் ஒரே கோரிக்கை இது மட்டுமே.
ஆந்திர பிரதேசம் என்ற சோதனை முயற்சி முழுத் தோல்வி அடைந்திருப்பதையே ஸ்ரீகிருஷ்ணா கமிட்டியின் அறிக்கை தெளிவாக்குகிறது. இதனால்தான் தெலுங்கானா பிராந்தியத்திற்கென தனி கவுன்சில் ஏற்படுத்தப்பட வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
எனவே தெலுங்கானா விஷயத்தில் இனிமேலும் பிரதமர் மன்மோகன் சிங் வேடிக்கை காட்டிக் கொண்டிருக்காமல், கடந்த 2009ம் ஆண்டு டிசம்பர் 9ம் தேதி அளித்த வாக்குறுதிப்படி தனித் தெலுங்கானா மாநிலத்தை உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தெலுங்கானா மக்களின் இதயத்தில் இருப்பது ஹைதராபாத். எனவே தெலுங்கானா மாநிலத்திற்கு ஹைதராபாத் மட்டுமே தலைநகராக இருக்க முடியும். அதை இழந்து விட்டு தெலுங்கானாவை தனி மாநிலமாக அடையவும் நாங்கள் விரும்பவில்லை. அதை இழக்க நாங்கள் தயாராக இல்லை என்றார் அவர்.
ராவின் இந்தப் பேச்சைப் பார்க்கும்போது தெலுங்கானாவில் மீண்டும் பெரும் போராட்டம் வெடிக்கும் என்பதை ஊகிக்க முடிகிறது.












Click it and Unblock the Notifications