ஒபாமாவின் செய்தித்தொடர்பாளர் கிப்ஸ் ராஜினாமா: அரசியல் ஆலோசகராகிறார்
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் பிரதான செய்தித்தொடர்பாளர் ராபர்ட் கிப்ஸ் தனது பதவியை அடுத்த மாதம் ராஜினாமா செய்யப்போவதாக அறிவித்துள்ளார்.
கிப்ஸ் வெள்ளை மாளிகையின் ஊடகச் செயலாளராக இருந்து வருகிறார். ஒபாமாவின் நம்பிக்கைக்கு பாத்திரமானவர்களில் ஒருவர். இந்த நிலையில் அப்பொறுப்பிலிருந்து விலகுகிறார் கிப்ஸ். அதற்குப் பதில் அடுத்த மாதம் முதல் அவர் ஒபாமாவின் அரசியல் ஆலோசகராக பணியாற்றுவார்.
2012-ம் ஆண்டும் வரும் அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடும் ஒபாமாவுக்கு துணையாக இருக்கவும் அவர் திட்டமிட்டுள்ளார்.
இது குறித்து அதிபர் ஒபாமா நேற்று தி நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில்,
கிப்ஸ் எனக்கு ஆலோசகராக நீடிப்பார். அவர் இனி வரும் காலங்களில் எனக்கு அரசியல் அறிக்கைகள் தயாரித்து தருவார். அவர் எளிய சம்பளத்தில் ஓய்வின்றி வேலை பார்த்தார் என்றார்.
கிப்ஸின் பதவிக்கு யார் வருவார் என்பது குறித்து இன்னும் 2 வாரங்களில் அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.
ஒபாமா மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்காக தலைமை நிர்வாக ஊழியர்களை மாற்றியமைத்துள்ளதையடுத்து கிப்ஸ் ராஜினாமா செய்கிறார். வரும் அதிபர் தேர்தலில் ஒபாமா அதிக பலம் வாய்ந்த குடியரசுக் கட்சி வேட்பாளரை சந்திக்கவிருக்கிறார்.
39 வயதாகும் கிப்ஸ் வடக்கு காரோலினா மாநில பல்கலைக்கழகத்தில் படித்தவர். அவர் கடந்த 2004-ம் ஆண்டு முதல் ஒபாமாவிடம் பணியாற்றுகிறார்.












Click it and Unblock the Notifications