நெல்லை திமுக கவுன்சிலரை தாக்க முயற்சி: மமமுகவினர் 10 பேர் கைது
நெல்லை: நெல்லை மாநகராட்சி கவுன்சிலரை தாக்க முயன்ற மனித நேய மக்கள் முன்னேற்ற கழகத்தினர் 10 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி கட்சியினர் தச்சநல்லூர் காவல் நிலையத்தை முற்றுகையி்ட்டனர்.
நெல்லை பேட்டையில் கழிவு நீரோடை சுத்தம் செய்வது தொடர்பாக நெல்லை மாநகராட்சி திமுக கவுன்சிலர் அப்துல் வகாப்பிற்கும், மனித நேய மக்கள் முன்னேற்ற கழகத்தினருக்கும் சில நாட்களுக்கு முன் மோதல் ஏற்பட்டது. இது தொடர்பாக இரு தரப்பினரும் பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இந்நிலையில் கவுன்சிலர் பேட்டையில் உள்ள ஒரு இல்ல நிகழ்ச்சிக்கு சென்றபோது மமமுகவினர் அவரை தாக்க முயன்றதாக அவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் மமமுகவை சேர்ந்த 15 பேர் மீது வழக்கு பதிவு செய்து 10 பேரை கைது செய்தனர்.
அவர்களை விசாரணைக்காக தச்சநல்லூர் காவல் நிலையத்தில் வைத்திருந்தனர். இதை அறிந்த மனித நேய மக்கள் முன்னேற்ற கழகத்தின் நிறுவனர் பாளை ரபீக், மாவட்ட துணை தலைவர் மைதீன் தலைமையி்ல் ஏராளமானோர் தச்சநல்லூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். அங்கு வந்த உதவி கமிஷனர் லயோலா இக்னோஷியஸ், இன்ஸ்பெக்டர் பற்குணம், பார்னாஸ் ஆகியோர் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து மமமுகவினர் கலைந்து சென்றனர்.












Click it and Unblock the Notifications