தமிழகத்தில் மருத்துவக் கல்விக்கு நுழைவுத் தேர்வு நடத்த இடைக்காலத் தடை
சென்னை: தமிழகத்தில் மருத்துவப் படிப்புகளுக்கு பொது நுழைவுத் தேர்வு நடத்த இந்திய மருத்துவக் கவுன்சிலுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
அகில இந்திய அளவில் மருத்துவப் படிப்புகளுக்கு பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என இந்திய மருத்துவக் கவுன்சில் அறிவித்திருந்தது. இதற்கு தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து மருத்துவக் கவுன்சிலின் உத்தரவு செல்லாது என்று மத்திய அரசு அறிவித்தது.
இந்த நிலையில், தமிழக அரசின் சுகாதாரத்துறையின் முதன்மை செயலாளர் சுப்புராஜ் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தார்.
அதில்,
தமிழகத்தில் 1984ம் ஆண்டுக்கு முன்பு தொழில் கல்வி சேர்க்கைக்கான நுழைவு தேர்வு நடத்தப்படவில்லை. 29.5.84 அன்று பிறப்பிக்கப்பட்ட அரசாணைக்கு பிறகே தமிழகத்தில் நுழைவு தேர்வு நுழைந்தது. இந்த தேர்வை நடத்தும் முகவராக அண்ணா பல்கலைக்கழகம் நியமிக்கப்பட்டது. இந்த நுழைவு தேர்வை நிறுத்துவதற்காக தமிழக அரசு முயற்சி மேற்கொண்டது.
இதற்காக கொண்டு வரப்பட்ட அரசாணையை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது. நுழைவு தேர்வை பகுதியாக ரத்து செய்வதற்கு தமிழக அரசு மற்றொரு முயற்சியை மேற்கொண்டது.
மாநில கல்வித்திட்டத்தில் படித்தவர்களுக்கு நுழைவு தேர்வு கிடையாது என்று 2006 ம் ஆண்டு அரசாணை கொண்டு வரப்பட்டது. இதுவும் உயர்நீதிமன்ற உத்தரவால் ரத்து செய்யப்பட்டது.
அதைத்தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழகத்தின் ஓய்வு பெற்ற துணைவேந்தர் எம்.அனந்த கிருஷ்ணனின் தலைமையில் நிபுணர் குழுவை தமிழக அரசு 2006 ம் ஆண்டு மே மாதம் அமைத்தது. நுழைவு தேர்வை ரத்து செய்வதற்கான வழிவகைகளை கண்டு அரசுக்கு பரிந்துரை செய்வதற்கு உத்தரவிடப்பட்டது.
இந்த குழு, மக்கள் கருத்துகளையும், கிராமப்புறம், நகர்ப்புற மாணவர்களின் கருத்துகளையும் அறிந்து 13.11.06 அன்று அரசுக்கு அறிக்கை அளித்தது. மாணவர்களுக்கு மனஉளைச்சலையும், பெற்றோருக்கு கூடுதல் பழுவையும், பயிற்சி மையங்களால் ஏற்படும் அதிக செலவையும் கட்டுப்படுத்துவதற்காக நுழைவு தேர்வை ஒழித்துவிடலாம் என்று அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது.
இந்த பரிந்துரையை தமிழக அரசு ஏற்று, அதை சட்டமாக்க முயற்சிகள் மேற்கொண்டது. அதற்கான தமிழக சட்டசபையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேறியதும், பல்வேறு மத்திய அரசின் துறைகளின் ஒப்புதலோடு ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. அதன் பின்னர் 3.3.07 அன்று ஜனாதிபதியின் ஒப்புதல் கிடைக்கப் பெற்றது.
அதன் பின்னர் அந்த மசோதா சட்டமாக்கப்பட்டு 7.3.07 ல் இருந்து அமலுக்கு வந்தது. நுழைவு தேர்வுக்கு தடை விதிக்கும் இந்த சட்டத்தின் 3 வது பிரிவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட பல்வேறு மனுக்களை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அரசியல் சாசனத்தின் அடிப்படையில் சட்டமாக்கப்பட்ட அந்த ஷரத்தை ரத்து செய்ய முடியாது என்று உத்தரவில் உயர்நீதிமன்றம் குறிப்பிட்டு இருந்தது.
இந்த நிலையில் மருத்துவ கல்வியில் சேர்வதற்கு இந்திய அளவில் தேசிய தகுதி மற்றும் நுழைவு தேர்வை எழுத வேண்டும் என்று இந்திய மருத்துவ கவுன்சில் அறிவிப்பாணை வெளியிட்டது. இதை வெளியிடும் முன்பு மாநில அரசுகளை மருத்துவ கவுன்சில் கலந்து ஆலோசிக்கவில்லை. மேலும் மத்திய சுகாதாரத்துறையின் ஒப்புதலையும் இந்த அறிவிப்பாணை பெறவில்லை.
தமிழகத்தில் அரசியல் சாசனத்தின் அடிப்படையில் சட்டமாக்கப்பட்ட ஷரத்துக்கு இந்த அறிவிப்பாணை முரணாக உள்ளது. அரசியல் சாசனம் பெரிதா? அறிவிப்பாணை பெரிதா? என்ற கேள்விக்கு அரசியல் சாசனம்தான் பெரிது என்று உணரப்படும். எனவே நுழைவு தேர்வுக்கு வழிவகை செய்யும் மத்திய மருத்துவ கவுன்சிலின் அறிவிப்பாணையை செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த மனுவை நீதிபதி பி.ஜோதிமணி விசாரித்தார். அரசு தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் பி.வில்சன் ஆஜரானார். அவரது வாதத்தை ஏற்று அறிவிப்பாணைக்கு இடைக்கால தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
மேலும், இந்த மனுவுக்கு பதிலளிக்கும்படி மத்திய அரசு மற்றும் மருத்துவ கவுன்சிலுக்கு நோட்டீஸ் அனுப்பவும் நீதிபதி உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications