கலவரம், தீ வைப்பு... வன்முறையில் உஸ்மானியா மாணவர்கள்!
ஆந்திராவை பிரித்து தெலுங்கானா தனி மாநிலம் அமைக்கலாமா? வேண்டாமா? என்பது பற்றி ஸ்ரீகிருஷ்ணா கமிட்டி ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்தது. இதில் தெலுங்கானா தனி மாநிலம் அமைப்பது சரிவராது என்ற கருத்தை மறைமுகமாக பிரதிபலித்துள்ளார் நீதிபதி கிருஷ்ணா. ஒன்றுபட்ட ஆந்திராதான் நல்லது என்று உறுதிப்பட தெரிவித்துள்ளார்.
இதனால் தெலுங்கானா ஆதரவாளர்கள் ஆவேசம் அடைந்துள்ளனர். ஹைதராபாத்தில் உள்ள உஸ்மானியா பல்கலைக்கழக மாணவர்கள் அப்பகுதி வழியாக வந்த ஏராளமான பஸ்களுக்கு தீ வைத்தனர். அவர்களை எல்லைப் பாதுகாப்பு படையினரும், போலீசாரும் சேர்ந்து விரட்டி அடித்தனர். கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டன. இதையும் மீறி மாணவர்கள் கல்வீச்சில் ஈடுபட்ட தால் ரப்பர் குண்டுகளால் போலீசார் சுட்டனர்.
இதில் 7 மாணவர்கள் காயம் அடைந்தனர். கல்வீச்சில் 2 போலீசார் காயம் அடைந்தனர். இதையடுத்து உஸ்மானியா பல்கலைக் கழகத்தைச் சுற்றி ஏராளமான போலீஸ் படை குவிக்கப்பட்டது.
இன்று அவர்கள் வெளியே வர முயன்ற மாணவர்களை விரட்டி அடித்தனர். இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டுள்ளது. மாணவர்கள் போராட்டம் காரணமாக மக்கள் பீதியில் வீட்டிலேயே முடங்கி உள்ளனர்.
தனி மாநிலம் கோரி தெலுங்கானா கூட்டு போராட்டக்குழு 2 நாள் முழு அடைப்பு நடைபெறும் என்று அறிவித்தது. இதன்படி நேற்று தெலுங்கானா பகுதியில் முழு அடைப்பு நடந்தது. இன்றும் முழு அடைப்பு போராட்டம் நடக்கிறது. இதனால் அங்குள்ள கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டன. வாரங்கல், மேடக் போன்ற மாவட்டங்களில் பதட்டம் காணப்படுவதால் அங்கு அதிக அளவு ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டனர்.
அவர்கள் தொடர்ந்து ரோந்து சுற்றி வருகிறார்கள். அங்கு பொதுமக்கள் கூட்டமாக நிற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தெலுங்கானாவில் பல்வேறு பகுதிகளில் மாணவர்கள் இன்று நடத்திய போராட்டத்தில் ஏராளமான அரசு பஸ்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன.
இன்னும் சேத விவரங்கள் தெரியவில்லை.
இந்த வன்முறையைத் தொடர்ந்து வெளிமாநிலங்களிலிருந்து ஆந்திராவுக்கு வரும் பஸ் - லாரிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. ரயில் சேவை தொடர்கிறது.













Click it and Unblock the Notifications