ஆளுநர் உரை-'யானைப் பசிக்கு சோளப் பொரி': விஜயகாந்த்
சென்னை: சட்டசபையில் ஆளுநர் ஆற்றிய உரை அரைத்த மாவையே அரைப்பது போல உள்ளது என்று தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கையில், கருணாநிதி அரசு பொறுப்பேற்ற ஐந்து ஆண்டுகளில் 5 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்புகள் அளிக்கப்பட்டுள்ளதாக ஆளுநர் உரையில் கூறப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருப்போரின் எண்ணிக்கை 70 லட்சம். ஆக 5 லட்சம் பேருக்கு வேலை கிடைத்திருப்பது என்பது யானைப் பசிக்கு கொடுத்த சோளப் பொரியைப் போல உள்ளது.
இலங்கை தமிழர் படுகொலைக்கு முழு முதல் காரணமாக இருந்துவிட்டு, இன்றைக்கு அவர்களின் வாழ்வுக்காகவும், தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவதைத் தடுப்பதற்காக பாடுபடுவதாகவும் கருணாநிதி அரசு கூறுவது, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் உள்ளது என்று கூறியுள்ளார்.
தங்கபாலு பாராட்டு:
தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு நிருபர்களிடம் கூறுகையில், கடந்த நான்கரை ஆண்டுகாலமாக காங்கிரஸ் சிறப்பாக தனது கடமையை சட்டசபையில் ஆற்றியிருக்கிறது. இதற்காக காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு பாராட்டை தெரிவித்துக்கொள்கிறேன். அந்த பணியை தொடர்ந்து ஆற்றுவார்கள்.
சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் தேர்வு குறித்து உரிய நேரத்தில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் முடிவு எடுத்து அறிவிப்பார்.
கவர்னர் உரையில் பல நல்ல திட்டங்கள் எடுத்துரைக்கப்பட்டுள்ளது. மாநில அரசின் திட்டங்களும், மத்திய அரசின் உதவியுடன் நிறைவேற்றப்படக்கூடிய திட்டங்களும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக தமிழக அரசுக்கு பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்திய அரசு இலங்கை பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இலங்கை தமிழர்கள் மறுவாழ்வுக்காகவும், நல்வாழ்வுக்காகவும் பல திட்டங்களை ரூ.8,000 கோடி அளவுக்கு இந்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இலங்கை தமிழர்களுக்கு சமமான வாழ்வாதாரம் கிடைக்கவும் இந்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
அரசின் விருப்புரிமையில் வீடுகள் மற்றும் மனைகள் ஒதுக்கீடு செய்யும் முறை ரத்து செய்யப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பை வரவேற்கிறேன். முதல்வர் உரிய நேரத்தில் உரிய முடிவுகளை எடுப்பார். காங்கிரசார் தமிழக அரசிடமிருந்து அவசியமின்றி எந்த சலுகையும் பெற மாட்டார்கள் என்றார்.












Click it and Unblock the Notifications