குவஹாத்தியில் பாஜக தேசிய செயற்குழுக் கூட்டம்-சோனியா மீது கத்காரி தாக்கு

பாஜகவின் தேசிய செயற்குழுக் கூட்டம் நேற்று குவஹாத்தியில் தொடங்கியது. இன்று கட்சித் தலைவர் நிதின் கத்காரி பேசினார்.
அப்போது காங்கிரஸ், சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரை நேரடியாகக் குறிப்பிடாமல் மறைமுகமாக தாக்கிப் பேசினார் கத்காரி.
அவர் கூறுகையில், ஒருவருக்கொருவர் பாராட்டிப் பேசிக் கொள்வது, பல்வேறு திட்டங்களை அடுக்கடுக்காக அறிவிப்பது, அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு வெற்றுக் கோரிக்கைகளை விடுப்பது ஆகியவை ஒரு கட்சிக்கு எந்த லாபத்தையும் தராது. (டெல்லி காங்கிரஸ் மாநாட்டில் ஊழலுக்கு எதிராக
5 அம்சத் திட்டத்தை சோனியா அறிவித்தார் என்பது நினைவிருக்கலாம்).
தீவிரவாதம் குறித்த பிரச்சினையில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணித் தலைவர்கள் மிக மிக அலட்சியமாகவும், கவனக்குறைவாகவும் செயல்படுகிறார்கள். பிரிவினைவாத, பாரபட்சமான போக்கையும், கருத்தையும் அவர்கள் வெளிப்படுத்துகிறார்கள். ஏன், தங்களது கருத்துக்களை வெளிநாட்டு தூதர்களிடமும் பகிர்ந்து கொள்கிறார்கள், சொந்த நாட்டினரிடம் கூட அவர்கள் சொல்வதில்லை. (அமெரிக்க தூதரிடம் இந்து தீவிரவாதம் குறித்து ராகுல் காந்தி கூறியது குறித்த விமர்சனம் இது).
அரசுப் பணத்தையும், கஜானாவையும் ஆளாளுக்கு கொள்ளையடித்துக் கொண்டுள்ளனர். ஆனால் பிரதமரோ, தனது கண்களை மூடிக் கொண்டு, அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார். அவர்களை காப்பாற்றியும் கொண்டுள்ளார்.
தேசிய பொருளாதாரத்தை இப்படித்தான் இவர்கள் திட்டமிட்டு கொள்ளையடித்துக் கொண்டுள்ளனர் என்றார் கத்காரி.
முன்னதாக நேற்று நடந்த முதல் நாள் கூட்டத்தில் பேசிய பாஜக தலைவர்கள் ஊழல் குறித்தும், காங்கிரஸ் குறித்தும் கடுமையாக சாடிப் பேசினர். குறிப்பாக ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தை பெரிதாக கையில் எடுத்துப் பேசினர்.












Click it and Unblock the Notifications