நடத்தையில் சந்தேகம்-பெண் போலீஸ் தீக்குளித்து தற்கொலை: கணவரும் தற்கொலை
கோவில்பட்டி: ராஜபாளையத்தில் கணவனின் சந்தேகத்தால் பெண் போலீஸ் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதனால் அவரது கணவரும் விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொண்டார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தாமஸ் நகரைச் சேர்ந்த ஆரோக்கியசாமி மகன் ஆரோக்கியராஜ். இவர் ஆசிரியர் பயிற்சி முடித்து விட்டு வேலையின்றி இருந்தார். காமநாயக்கன் பட்டியைச் சேர்ந்த பிச்சையா மகள் ஜான்சி. இவர் ராஜபாளையம் 11வது பட்டாலியனில் போலீசாக வேலை பார்த்து வந்தார்.
இவர்கள் இருவருக்கும் கடந்த 8 மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது. தற்போது ஜான்சி கர்ப்பிணியாக இருந்தார். இருவரும் ராஜபாளையம் போலீஸ் காலனியில் தங்கியிருந்தனர். ஜான்சி அடிக்கடி செல்போனில் பேசியுள்ளார். நேற்று முன்தினம் இரவும் அவர் செல்போனில் பேசிக் கொண்டிருந்தார்.
இதனால் அவரை ஆரோக்கியராஜ் சத்தம் போட்டுள்ளார். இதில் மனமுடைந்த ஜான்சி கணவர் முன் தன் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதை பார்த்த ஆரோக்கியராஜ் உடனடியாக வீட்டைப் பூட்டி விட்டு அங்கிருந்து பைக்கில் கோவில்பட்டியி்ல் உள்ள தந்தை வீ்ட்டுக்கு வந்து வி்ட்டார்.
ஜான்சியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிவகாசியில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து வாணியம்பட்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தந்தை வீட்டுக்கு வந்த ஆரோக்கியராஜ் விஷம் குடித்த நிலையில் பாத்ரூமில் இறந்து கிடந்தார்.
இது குறித்து கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பாலாஜி, சப்-இன்ஸ்பெக்டர் கணேஷ் பாண்டியன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications