பொங்கல் சமயத்தில் ஸ்டிரைக் செய்ய வேண்டாம்-போக்குவரத்து ஊழியர்களுக்கு ஜெ. கோரிக்கை
சென்னை: ஊதிய உயர்வு தொடர்பாக போக்குவரத்து ஊழியர் சங்கங்கள் திட்டமிட்டுள்ள ஸ்டிரைக்கை, பொங்கல் சமயத்தில் செய்ய வேண்டாம் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளார்.
போக்குவரத்துக்கழக ஊழியர்களுக்கான ஊதிய உயர்வுக்கான சமரச ஒப்பந்தம் கடந்த 8-ந் தேதி போக்குவரத்து அமைச்சர் கே.என்.நேரு முன்னிலையில் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தில் இதில் கையெழுத்திடும் அதிகாரம் பெற்ற தொழிற்சங்க அமைப்பான திமுகவின் தொழிலாளர் முன்னேற்ற சங்கம் கையெழுத்திட்டது.
ஆனால் இந்த ஒப்பந்தத்திற்கு அதிமுகவின் அண்ணா தொழிற்சங்கப் பேரவை உள்ளிட்டவை ஆட்சேபனை தெரிவித்திருந்தன.
இந்த நிலையில், அண்ணா தொழிற்சங்க பேரவை சார்பில், அனைத்து தொழிற்சங்கங்களின் ஒருங்கிணைந்த ஆலோசனைக் கூட்டம் அண்ணா தொழிற்சங்கப்பேரவை தலைவர் தா.பிச்சப்பா தலைமையில் சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் பல்வேறு தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பிச்சப்பா பேசுகையில்,
போக்குவரத்து தொழிலாளர் சம்பள உயர்வு ஒப்பந்தம் தொடர்பாக 2, 3 சுற்றுகள் பேச்சுவார்த்தை என்ற முறையில் நாடகம் அரங்கேற்றப்பட்டு, எவ்வித ஊதிய உயர்வும் இல்லாமல், ஏற்கனவே அறிவித்த தொகையையே 8.1.2011 அன்று இடைக்கால ஒப்பந்தமாக எல்.பி.எப்.தொழிற்சங்கம், போக்குவரத்துக்கழக நிர்வாகங்கள், தொழிலாளர் நலத்துறை இணைந்து கையொப்பமிட்டுள்ளனர்.
கடந்த 12 ஆண்டுகளாக வஞ்சிக்கப்பட்ட போக்குவரத்து தொழிலாளர்களுக்கு, இந்த ஒப்பந்தத்திலாவது மின்வாரிய ஊழியர்களுக்கு இணையான சம்பளம் கிடைக்கும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் பெருத்த ஏமாற்றமே மிஞ்சியது. அரசும், தி.மு.க.வின் தொ.மு.ச. பேரவையும் இணைந்து போக்குவரத்து தொழிலாளர்களுக்கு துரோகம் இழைத்துவிட்டது.
அமைச்சர் முன்னிலையில் அங்கீகாரம் பெற்ற சங்கம் பேசி இறுதிப்படுத்த முடியாததை அதிகாரிகள் கமிட்டி இறுதிப்படுத்தும் என்று கூறுவது கொக்கு தலையில் வெண்ணெய் வைத்து பிடிப்பேன்' என்று சொல்வதற்கு ஒப்பாகும்.
கடந்த 33 ஆண்டுகளாக இருந்த ஊதிய ஒப்பந்த நடைமுறையை மாற்றி, இடைக்கால ஒப்பந்தம் என்று அறிவித்து இருப்பது சரியல்ல. இந்த நடவடிக்கையை கண்டித்து, ஊதிய உயர்வு குறித்து, தொ.மு.ச.தவிர மற்ற சங்கங்கள் பேசக்கூடாது என்று போடப்பட்டுள்ள அரசாணையை திரும்பப் பெற வேண்டும்.
போக்குவரத்துக்கழக ஊழியர்களுக்கு, மின்வாரிய ஊழியர்களுக்கு இணையான ஊதியம் உள்பட எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றாததைக் கண்டித்து உடனடியாக வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதாக முடிவு செய்திருந்தோம். பொங்கல் பண்டிகை சமயத்தில் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் வேலைநிறுத்தம் செய்யவேண்டாம் என்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
எனவே, 18-ந் தேதியில் இருந்து 22-ந் தேதி வரையில் 7 கோட்ட அலுவலகங்களின் முன் வாயிற்கூட்டங்கள் நடத்துவது என்றும், 25-ந் தேதிக்குள் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் அதன்பின் முறைப்படி அனுமதி பெற்று வேலைநிறுத்தம் போராட்டம் செய்வது என்றும் தீர்மானிக்கப்பட்டது என்றார்.












Click it and Unblock the Notifications