தொடர் ரெய்டுகளைக் கண்டித்து டெல்லி வெங்காய வியாபாரிகள் காலவரையற்ற ஸ்டிரைக்
டெல்லி: வெங்காய மண்டிகளில் தொடர்ந்து நடந்து வரும் ரெய்டுகளைக் கண்டித்து டெல்லி வெங்காய வியாபாரிகள் காலவரையற்ற ஸ்டிரைக்கில் குதித்துள்ளனர்.
நாடு முழுவதும் வெங்காயம் கடுமையான விலை உயர்வைக் கண்டுள்ளது. இதனால் மக்கள் பெரும் அதிருப்தி அடைந்துள்ளனர். வெங்காயப் பதுக்கலே இதற்கு முக்கியக் காரணம் என்று குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து நாடு முழுவதும் மொத்த வியாபாரிகளிடம் ரெய்டுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
டெல்லியிலும் இந்த ரெய்டு தொடர்ந்து வருகிறது. இதற்கு ஆசியாவிலேயே மிகப் பெரிய காய்கறி மற்றும் பழச் சந்தையான டெல்லி ஆசாத்பூர் மண்டி வியாபாரிள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
ரெய்டுகளால் தங்களது தொழில் பாதிக்கப்படுவதாகவும், நற்பெயர் கெடுவதாகவும் கூறி அவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் குதித்துள்ளனர். இதையடுத்து வியாபாரிகள் மீது எஸ்மா சட்டம் பிரயோகிக்கப்படும் என டெல்லி அரசு எச்சரித்துள்ளது.
வரி ஏய்ப்பு என்ற பெயரில் இந்த ரெய்டுகளை வருமான வரித்துறை நடத்துகிறது. சோதனை என்ற பெயரில் எங்களை பல்வேறு வகையில் தொல்லைக்குள்ளாக்குகிறார்கள். இதனால் தொழில் செய்ய முடியவில்லை. இந்த சோதனைகளை நிறுத்தக் கோரியே இந்த ஸ்டிரைக் என்று வியாபாரிகள் கூறியுள்ளனர்.
ஆனால் ஸ்டிரைக்கைக் கைவிடாவிட்டால் எஸ்மா சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என டெல்லி மாநில அரசு எச்சரித்துள்ளது.
வெங்காய வியாபாரிகளின் இந்த திடீர் ஸ்டிரைக்கால் டெல்லியில் வெங்காய விலை மேலும் உயரும் அபாயம் எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications