போயஸ் தோட்டத்தில் தொடர்நது போராட்டம்-சேகர்பாபு ஆதரவாளர்கள் அதிரடி நீக்கம்
சென்னை: கட்சித் தலைமைக்கு எதிராக, தொடர்ந்து ஜெயலலிதாவின் போயஸ் தோட்டத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தி வந்ததைத் தொடர்ந்து முன்னாள் வட சென்னை மாவட்ட அதிமுக செயலாளர் சேகர்பாபு எம்.எல்.ஏ.வின் ஆதரவாளர்கள் கட்சிப் பொறுப்புகளிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர்.
சென்னை நகர அதிமுகவின் பலமான புள்ளிகளில் ஒருவர் சேகர்பாபு. வட சென்னை மாவட்ட அதிமுக செயலாளராக இருந்து வந்தார். இவர், கட்சியின் அவைத் தலைவரான மதுசூதனின் உறவினர் ஆவார்.
இந்த நிலையில் சேகர்பாபுவின் செயல்பாடுகள் குறித்து ஜெயலலிதாவுக்கு தொடர்ந்து புகார்கள் வரவே, அவரை பொறுப்பிலிருந்து நீக்கினார். அவரது இடத்தில் இன்னொரு மிக முக்கியப் புள்ளியான முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நியமிக்கப்பட்டார்.
அன்று முதல் சேகர்பாபுவின் ஆதரவாளர்கள் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அடிக்கடி போயஸ் தோட்டத்தில் உள்ள ஜெயலலிதாவின் வீட்டுக்கு வந்து முற்றுகைப் போராட்டம் நடத்துவது தொடர் கதையானது.
இதையடுத்து சேகர்பாபுவின் ஆதரவாளர்கள் 6 பேர் சமீபத்தில் நீக்கப்பட்டனர். இதைக் கண்டித்து சமீபத்தில் ஜெயலலிதாவின் வீட்டை முற்றுகையிட்டு சேகர்பாபுவின் ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது ஜெயலலிதா வந்த காரைத் துரத்தியும் பரபரப்பை ஏற்படுத்தினர்.
இதையடுத்து தற்போது சேகர்பாபுவின் ஆதரவாளர்கள் 23 பேரை கட்சி அதிரடியாக நீக்கியுள்ளது.
இது குறித்து ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில்,
வட சென்னை மாவட்ட அ.தி.மு.க. சிறுபான்மையினர் நலப்பிரிவு செயலாளர் பொறுப்பில் இருக்கும் டி.வி. நாகர், எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் சாகுல் அமீது, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி துணை செயலாளர் ஆர். பழனி, எழும்பூர் சட்ட சபை தொகுதி இணை செயலாளர் டி. பிரகாஷ், அ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் மற்றும் பெரம்பூர் பகுதி மகளிர் அணி செயலாளர் மணிமுத்து குருசாமி, ஆர்.கே. நகர் பகுதி அ.தி.மு.க. இணை செயலாளர் ரஜினிதேவி, துணை செயலாளர் மாலா, பொருளாளர் மோகன், மகளிர் அணி தலைவர் பெரிய வீரம்மா.
ராயபுரம் பகுதி அ.தி.மு.க. துணை செயலாளர் புருசோத்தமன், மாணவர் அணி செயலாளர் சந்திரபொம்மு, பெரம்பூர் பகுதி மாவட்ட அ.தி.மு.க. பிரதிநிதி சாந்தி, துறைமுகம் ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் பிரஸ்சேகர், துறைமுகம் அண்ணா தொழிற்சங்க செயலாளர், மாவட்ட பிரதிநிதி மற்றும் 25-வது வட்ட அ.தி.மு.க. மேலமைப்பு பிரதிநிதி பொறுப்புகளில் இருக்கும் லூக்காஸ், துறைமுகம் எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் ரமேஷ், கொளத்தூர் பகுதி அண்ணா தொழிற்சங்க செயலாளர் சதீஷ்பாபு.
வில்லிவாக்கம் தொகுதி ஜெயலலிதா பேரவை செயலாளர் பாக்சர் மதன், எழும்பூர் மாணவர் அணி செயலாளர் சதீஷ்குமார், எழும்பூர் சிறுபான்மையினர் நலப்பிரிவு செயலாளர் ஆண்ட்ரோஸ், 2-வது கிழக்கு வட்ட செயலாளர் சதீஷ், 2-வது வட்ட செயலாளர் கல்யாணி என்கிற கல்யாண சுந்தரம், 49-வது வட்ட செய லாளர் பூக்கடை முரளி ஆகியோர் இன்று முதல் அவரவர் வகித்து வரும் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அதிரடி நீக்கத்தால் சேகர்பாபு வட்டாரம் அதிர்ச்சி அடைந்துள்ளது. ஆனால், தான் இதுவரை ஜெயலலிதாவை மதிக்கும் சாதாரண தொண்டனாகவே இருந்து வருவதாகவும், தன்னை கட்சியை விட்டு நீக்க சிலர் முயன்று வருவதாகவும் கூறியுள்ளார் சேகர்பாபு.
சேகர்பாபு பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டதுமே அவர் திமுகவில் போய்ச் சேரப் போவதாக பேச்சுக்கள் அடிபட்டன. இருப்பினும் அவரை கட்சித் தலைமை சமாதானப்படுத்தி வைத்திருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் தொடர்ந்து சேகர்பாபுவின் ஆட்கள் சரமாரியாக நீக்கப்பட்டு வருவதால் தேர்தல் நெருங்கும் சமயத்தில் சேகர்பாபு கூண்டோடு அணி மாறக் கூடும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.












Click it and Unblock the Notifications