திருடனைப் பிடித்தால் பரிசு-தமிழக போலீஸாருக்கு பெங்களூர் போலீஸ் 'ஆபர்'!
பெங்களூர்: பெங்களூரில் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த திருச்சியைச் சேர்ந்த கும்பலைப் பிடிக்க முடியாத அளவுக்கு தமிழக காவல்துறையில் சிலர் இடையூறாக இருப்பதால், அந்தக் கும்பலைப் பிடித்துத் தந்தால் ரூ. 50,000 பரிசு தருவதாக தமிழக காவல்துறைக்கு, பெங்களூர் போலீஸ் தெரிவித்துள்ளதாம்.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பெங்களூர் டிவிஜி சாலையில், டாக்டர் பொம்மையா என்பவரின் காரில் வைக்கப்பட்டிருந்த ரூ. 8 லட்சம் மதிப்புள்ள அல்ட்ரா சவுன்ட் ஸ்கேனர் திருட்டுப் போனது.
பணம் கீழே கிடக்கிறது என்று பொம்மையாவின் கார் டிரைவரிடம் கூறிய ஒரு நபர், டிரைவர் கீழே இறங்கி, அந்த மர்ம நபர் போட்ட போலி கரன்சிகளை எடுத்தபோது ஸ்கேரனை திருடிச் சென்று விட்டார்.
இதுகுறித்து போலீஸார் நடத்திய விசாரணையில், திருச்சியைச் சேர்ந்த ஒரு கும்பலுக்கு இதில் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதேபாணியில் மேலும் சில குற்றச் செயல்களும் நடந்தன. அனைத்திலும், திருச்சிக் கும்பல் தொடர்புடையதாக இருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து அந்தக் கும்பலைப் பிடிக்க திருச்சி போலீஸாரின் உதவியை பெங்களூர் போலீஸார் நாடினர். ஆனால் பலன் இல்லை. இந்த சமயத்தில்தான், அந்தக் கும்பலைச் சேர்ந்தவர்களுக்கு, திருச்சி காவல்துறையைச் சேர்ந்த சில காவலர்கள் உடந்தையாக இருப்பதாக பெங்களூர் போலீஸாருக்குத் தெரிய வந்துள்ளதாம். மேலும் திருட்டுப் பொருட்களை திருச்சி போலீஸார் சிலர் பெற்றுக் கொள்வதும் தெரிய வந்துள்ளதாம்.
இதுகுறித்து பெங்களூர் காவல்துறையின் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் கூறுகையில், இங்கிருந்து திருடிச் செல்லும் பொருட்களை திருச்சியைச் சேர்ந்த குறிப்பிட்ட சில போலீஸாரிடம் திருடர்கள் கொடுக்கிறார்கள். அதை வாங்கும் போலீஸார், அங்குள்ள ராம்ஜி நகரில் உள்ள விற்பனையகங்களில் விற்று காசு பெறுகிறார்கள். பின்னர் திருடர்களுக்கு ஒருதொகையை கமிஷனாகவும் தருகிறார்கள்.
இது எங்களுக்குத் தெரிய வந்ததைத் தொடர்ந்து திருடர்கள் தரும் பணத்தை நாங்கள் தருகிறோம். அதாவது ரூ. 50,000 வரை பரிசு போல தருகிறோம். அந்த திருடர்களைப் பிடித்துக் கொடுத்து விடுங்கள் என்று திருச்சி போலீஸாருக்குத் தகவல் அனுப்பியுள்ளோம் என்று கூறினர்.
தமிழக போலீஸாருக்கு இப்படி ஒரு சோதனையா?












Click it and Unblock the Notifications