இலங்கைப் படையால் கொல்லப்பட்ட மீனவர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிதி-சகோதரிக்கு அரசு வேலை-ஸ்டாலின்
சென்னை: இலங்கை கடற்படையால் சுட்டுக் கொல்லப்பட்ட தரங்கம்பாடி மீனவர் பாண்டியன் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் நிவாரண உதவி அளிக்கப்படும். அவரது சகோதரிக்கு அரசு வேலை அளிக்கப்படும் என்று துமை முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மீனவர் பாண்டியன் கொடூரமாக கொல்லப்பட்ட விவகாரம் இன்று சட்டசபையில் எழுப்பப்பட்டது.
அதிமுக, இடதுசாரிகள், மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், பாமக மற்றும் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் இதுகுறி்த்துப் பேசினர்.
இதற்கு பதில் அளித்து ஸ்டாலின் கூறியதாவது:
நாகை மாவட்டம், தரங்கம்பாடியை அடுத்த சின்னங்குடியைச் சேர்ந்த மீனவர் பாண்டியன் என்பவர் ஜெகதாப்பட்டினம் அருகே மீன் பிடிக்கச் சென்றிருந்த போது, அவரை இலங்கை கடற்படையினர் சுட்டதால் உயிரிழந்திருக்கிறார்.
இதனால் அந்த பகுதி மீனவர்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கக்கூடிய கொந்தளிப்பு குறித்து இந்த அவையினுடைய கவனத்தை ஈர்க்கக்கூடிய வகையில் இங்கேதங்களுடைய கருத்துகளை எடுத்து வைத்திருக்கிறார்கள்.
அந்த கருத்துக்களோடு அரசின் சார்பில் எங்களுடைய உணர்வு நிச்சயமாக இருக்கிறது என்று இங்கே இருக்கக்கூடிய உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றாக தெரியும் என்று நம்புகிறேன். ஆகவே அந்த வகையிலே அரசின் சார்பிலே ஒரு விளக்கத்தை இங்கே எடுத்து வைக்க விரும்புகிறேன்.
12.1.2011 காலை 6 மணி அளவில் புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாப்பட்டினம் மீன்பிடி தளத்திலிருந்து காரைக்கால்- கிளிஞ்சல் மேட்டைச் சேர்ந்த ஆனந்தராஜ் என்பவருககு சொந்தமான விசைப்படகு ஒன்றில் பாண்டியன் உள்ளிட்ட நான்கு மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றிருக்கிறார்கள். மாலை 5 மணி அளவில் ஜெகதாப்பட்டினத்திற்கு கிழக்கே சுமார் 15 கடல் மைல் தூரத்தில் மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை பார்த்து துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.
இதில் பாண்டியன் குண்டு காயம் அடைந்திருக்கிறார். உடன் இருந்த மீனவர்கள் காயம் அடைந்த பாண்டியனை கரைக்கு அழைத்து வந்து மணல்மேல்குடி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றிருக்கிறார்கள்.
இதனையடுத்து மீனவர் சுமார் 100 பேர், பாண்டியனின் பிரேதத்தை ஜெகதாப்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலையிலே வைத்து நடவடிக்கை எடுக்க கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மாவட்ட நிர்வாகத்தினர் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் சம்பவ இடம் சென்று மறியலில் ஈடு பட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தியும், இறந்து போன பாண்டியன் குடும்பத்தாருக்கு ரூ.5 லட்சம் நிவாரண் தொகை இன்றைய தினத்திற்குள் வழங்கப்படும் எனவும் மேலும் அவரது சகோதரி ஒருவருக்கு அரசு வேலைவாய்ப்பு அளிப்பதாகவும், உறுதி அளித்ததின்பேரில் சாலை மறியலை கைவிட்டனர். தற்போது பாண்டியனின் உடல் அரசு மருத்துவமனையில் பரிசோதனைக்காக உள்ளது.
பிரேத பரிசோதனைக்கு பின் உறவினரிடம் ஒப்படைக்கப்பட இருக்கிறது. மாவட்ட ஆட்சித்தலைவர் 5 லட்சம் ரூபாய்க்கான காசோலையை தயாராக வைத்துள்ளார். மாவட்ட ஆட்சித்தலைவரிடம் காலையிலேயே தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு பேசப்பட்டிருக்கிறது. அங்கே எந்தவிதமான சட்ட-ஒழுங்கு பிரச்சினையும் இல்லை என்று மாவட்ட ஆட்சித்தலைவர் கூறுகிறார். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து முறையாக நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
தமிழக மீனவர்கள் இவ்வாறு தொடர்ந்து இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவது குறித்து மத்திய அரசிடம் நாம் தொடர்ந்து பலமுறை கோரிக்கை வைத்து, அவர்களும் இலங்கை அரசிடம் வலியுறுத்திக் கூறியும் இப்படிப்பட்ட சம்பவங்கள் ஆங்காங்கே நடந்தே வருகின்றன.
இந்த சம்பவம் குறித்தும் மத்திய அரசுக்கு இன்றைய தினமே முதல்-அமைச்சர் உடனடியாக இதன் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டு தந்தி ஒன்றும் அனுப்பியிருக்கிறார் என்பதை நான் இந்த அவைக்கு தெரிவித்துக்கொள்கிறேன் என்றார் ஸ்டாலின்.












Click it and Unblock the Notifications