சீனாவில் இருந்து தூத்துக்குடிக்கு வந்த 1150 நச்சு வாயு சிலிண்டர்கள் பறிமுதல்
தூத்துக்குடி: சீனாவில் இருந்து வந்த நச்சுத்தன்மை வாய்ந்த 1150 காஸ் சிலிண்டர்களை தூத்துக்குடி வருவாய் புனலாய்வுத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
வெளிநாடுகளில் இறக்குமதி செய்யத் தடை செய்யப்பட்டுள்ள ஆர் 22 என்ற காஸ் சிலிண்டர்கள் தூத்துக்குடிக்கு கடத்தி வரப்படுவதாக வருவாய் புனலாய்வுத் துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து வருவாய்துறை புனலாய்வு இயக்குநர் ராஜன், துணை இயக்குனர் அமல்ராஜ், கண்காணிப்பாளர்கள் முத்துகிருஷ்ணன், ராஜூ மற்றும் அதிகாரிகள் தூத்துக்குடி துறைமுகம் வழியாக வந்த கன்டெய்னர்களை சோதனையிட்டனர். இதில் சீனாவில் இருந்து பாலக்காட்டில் உள்ள ஷெய்ன் டிரேட் லிங்க் என்ற நிறுவனத்துக்கு வந்துள்ள கன்டெய்னரை சோதனையிட்டனர்.
அதற்குரிய ஆவணங்களில் பெண்டா புளோரா ஈத்தேன் என்ற காஸ் சிலிண்டர்கள் இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. சந்தேகமடைந்த அதிகாரிகள் அந்த காஸ் சிலிண்டர்களில் இருந்த காஸை ஆய்வக பரிசோதனைக்கு உட்படுத்தினர்.
ஆவணங்களில் குறிப்பிடப்பட்டிருந்ததுக்கு பதிலாக இறக்குமதி தடை செய்யப்பட்ட கொடிய குளோரா டை ப்ளோரா மீத்தேன் நிரப்பட்டிருப்பது தெரிய வந்தது. இந்த வாயு ஆர் 22 என அழைக்கப்படுகிறது. இதனால் அந்த கன்டெய்னரில் இருந்த ஆர் 22 நிரப்பப்பட்டிருந்த 1150 சிலிண்டர்களை பறிமுதல் செய்தனர். இவற்றின் மதிப்பு ரூ.63 லட்சம் ஆகும்.
இதில் தொடர்புடைய பாலக்காடு நிறுவனம் மீது வழக்கு தொடரப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சிலிண்டர்களை சீனாவுக்கே திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications