கோவில்பட்டி அருகே லாரி-கார் மோதலில் 5 ஐயப்ப பக்தர்கள் பலி
கோவில்பட்டி: கோவில்பட்டி அருகே நான்கு வழி சாலையில் நின்று கொண்டிருந்த கன்டெய்னர் லாரி மீது லாரி மோதியதில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் 5 பேர் பலியாகினர்.
ஆந்திர மாநிலம் ரெங்கரெட்டி மாவட்டத்தில் உள்ள பேகம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த 11 பேர் சபரிமலைக்கு மாலை அணிந்து கடந்த 9-ம் தேதி குவாலிஸ் காரில் கிளம்பினர். காரை ஐயப்ப பக்தர் ராஜ் கவுடா ஓட்டினார்.
கடந்த 11-ம் தேதி சபரிமலை வந்த இவர்கள் சுவாமி தரிசனம் செய்துவி்ட்டு அங்கிருந்து நேற்று கன்னியாகுமரி வந்தனர். அங்கு சுற்றிப்பார்த்து விட்டு நேற்று நள்ளிரவு 11 மணிக்கு ஊர் கிளம்பினர்.
இவர்களது கார் இன்று அதிகாலை 3.30 மணி அளவில் கோவில்பட்டி-சாத்தூர் நான்கு வழி சாலையில் வந்து கொண்டிருந்தபோது என் சுப்பையாபுரம் விலக்கு அருகே தூத்துக்குடியில் இருந்து சென்னை சென்ற கன்டெய்னர் லாரி சாலையோரம் நின்றிருந்தது.
அதிகாலை பனி மூட்டம் காரணமாக சாலையில் லாரி நிற்பது சரியாக தெரியவில்லை. இதனால் ஐயப்ப பக்தர்கள் கார் எதிர்பாராவிதமாக லாரியின் பின்புறம் பயங்கர சத்தத்துடன் மோதியது.
மோதிய வேகத்தில் கன்டெய்னர் லாரியின் பின்புறம் காரின் முன் பகுதி சொருகி கொண்டது. இதில் காரில் இருந்த பால்ராஜ், மகேஷ், சாய், ஸ்ரீனு ஆகிய 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
நரேந்தர், லட்சுமியாய், மகேந்தீர், அஞ்சையா, ரவீந்தர், ராஜ் கவுடா ஆகிய 6 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் சாத்தூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிக்சைக்கு பின் மதுரை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி நரேந்தர் உயிரிழந்தார்.
மற்ற 5 பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து தகவல் அறிந்த விருதுநகர் மாவட்ட எஸ்பி பிரபாகர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீ்ட்பு பணிகளை துரிதப்படுத்தினார்.












Click it and Unblock the Notifications