குடித்தவரும் மறந்து விட்டார், ஊற்றிக் கொடுத்தவரும் மறந்து விட்டார்-விஜயகாந்த் மீது முரசொலி தாக்கு

சேலத்தில் நடந்த தேமுதிக மாநில மாநாட்டின்போது முதல்வர் கருணாநிதியையும், திமுக அரசையும் கடுமையாக விமர்சித்துப் பேசினார் விஜயகாந்த். அதற்கு முரசொலி மூலம் திமுக பதிலளித்துள்ளது.
முரசொலி செய்தி:
ஒரு சில ஏடுகளில் பிரமாதமாக விளம்பரம் செய்யப்பட்ட - தே.மு.தி.க. சார்பான மாநாடு சேலத்தில் நடைபெற்று முடிந்திருக்கின்றது.
அந்தக் கட்சியின் தலைவர் பற்றி - எதிர்க் கட்சித் தலைவர் - ஜெயலலிதா சூட்டிய அடைமொழி "குடிகாரன்" என்பது தான். அதற்குப் பதில் சொன்ன தே.மு.தி.க. தலைவர் "ஆமாம், ஜெயலலிதா தான் எனக்கு ஊற்றிக் கொடுத்தார்" என்பதைப் போல கூறியதும் ஏடுகளிலே அப்படியே உள்ளது.
ஆனால் இந்த வாசகங்கள் ஊற்றிக் கொடுத்தவருக்கும் மறந்து விட்டது. வாங்கிக் குடித்தவருக்கும் மறந்து விட்டது. நமக்குத் தான் மறக்கவில்லை.
9 ம் தேதிய "இந்து" பத்திரிகையில் முதல் பக்கத்தில் ஒரு செய்தி. அதற்கு தலைப்பே அ.இ.அ.தி.மு.க. மீது குறை கூறுவதற்கு விஜய காந்த் எதிர்ப்பு என்பதாகும்.
அ.தி.மு.க. தலைமையை விமர்சிக்கும் வகையில் வெளிவந்த விளம்பரத்தை தே.மு.தி.க-வினர் தரவில்லை என்று விஜயகாந்த் அறிக்கை விடுத்திருந்தார்.
எதற்காக இந்த அவசர அறிக்கை. ஏன் இந்த அச்சம் ? தே.மு.தி.க -வைச் சேர்ந்த சிலர் ஏதோ ஒரு விளம்பரம் ஏடுகளில் தந்திருக்கிறார்கள். அதிலே அ.தி.மு.க. தலைமையைப் பற்றி குறிப்பிட்டு விட்டார்களாம். உடனே விஜயகாந்த், அந்த விளம்பரம் தாங்கள் கொடுத்ததல்ல என்று அஞ்சிட வேண்டிய நெருக்கடி என்ன வந்தது ?
இவ்வாறு முண்டா தட்டிவிட்டு - சேலத்தில் போய் கட்சியையோ, கட்சித் தொண்டர் களையோ யாரிடமும் அடகு வைக்கமாட்டேன், தன்மானத்தை இழக்க மாட்டேன், எத்தனையோ கட்சிகள் பிற கட்சிகளிடம் அடிமைகளாக உள்ளனர், நான் உங்களை யாரிடமும் அடிமையாக்க மாட்டேன், நம் கட்சியின் ஆதரவு இல்லாமல் யாரும் வெற்றிபெற முடியாது என்று சண்டமாருதம் செய்துள்ளார்.
முதல் நாள் சென்னையிலே தொடை நடுங்கி, அ.தி.மு.க. தலைமைக்கெதிராக விளம்பரம் தரவில்லை என்று மண்டியிட்டு விட்டு, சேலத்திலே போய் முழக்கம் என்ன வேண்டிக் கிடக்கிறது ?
ஜெயலலிதாவிடம் அடி பணியப் போகிறவர்களெல்லாம் - அந்த அம்மாவை துதிபாடுகிறார்களோ இல்லையோ - முதலில் அவர்கள் தலைவர், முதல்வர் கலைஞரையும், அவர் குடும்பத்தினரையும் வசைபாடத் தொடங்கி விடுவார்கள்.
ஏனென்றால் அம்மையாருக்குப் பிடித்ததைச் செய்தால் தானே, அவருடைய முக தரிசனமாவது கிடைக்கும். கனவிலே அம்மையாரை நினைத்தால் கூட - வருங்கால முதலமைச்சர் என்று கூறமாட்டேன். ஏன் துணை முதலமைச்சர் பதவி கூட வேண்டாம், நீங்கள் கொடுத்ததை ஏற்றுக் கொள்கிறேன், ஏன் இனி என் கட்சித் தொண்டர்கள் கறுப்பு எம்.ஜி.ஆர். என்று கூட என்னை விமர்சனம் செய்து விளம்பரம் செய்ய மாட்டார்கள், எம்.ஜி.ஆர். படத்தோடு இணைந்து என் படத்தைப் போட மாட்டேன் என்று காலில் விழுவதற்கு தயாரான பிறகு எதற்காக சவடால் பேச்செல்லாம் ?
ஊழலுக்கு கலைஞர் தான் பொறுப்பாம், இந்த உத்தம சிகாமணி கூறுகிறார். கலைஞரை அழைத்து கடற்கரையில் பாராட்டு விழா நடத்தினாயே, அப்போது கலைஞருக்கும் ஊழலுக்கும் சம்மந்தம் இல்லை என்று உனக்குப் புரிந்தது. இப்போது தெளிந்து விட்டதா? ஊழல் புரிந்து சொத்துக்களை வாங்கிக் குவித்து, உச்சநீதிமன்றம் வரை வழக்கினை எடுத்துச் சென்று எப்போது தீர்ப்பு என்று எதிர்பார்த்துக் கொண்டிருப்பவரைப் பற்றி சேலம் மாநாட்டில் விஜயகாந்த் வாய் திறக்காதது ஏன்? எத்தனை கோடி என்பது நிச்சயமாகி விட்டதா? என்று கேட்டுள்ளது முரசொலி.












Click it and Unblock the Notifications