நெல்லையில் மூளைச் சாவு ஏற்பட்ட பெண்ணின் உடல் உறுப்புகள் தானம்
நெல்லை: நெல்லையில் மூளைச் சாவு ஏற்பட்ட பெண்ணின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது.
மூளைச் சாவு ஏற்பட்ட சென்னையைச் சேர்ந்த மாணவர் ஜிதேந்திரனின் உடல் உறுப்புகள் கடந்த ஆண்டு தானம் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் மூளைச் சாவு அடைகிறவர்களின் உடல் உறுப்புகளைத் தானம் செய்யும் பழக்கம் அதிகரித்து வருகிறது.
இதனால் பல உயிர்கள் காப்பாற்றப்படுகின்றன. அவ்வாறு நெல்லையில் இதுவரை 3 பேரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டுள்ளன. தற்போது பெண் ஒருவரின் உடல் உறுப்புகளும் தானம் செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள ஆறுமுகமங்கலம் செல்வநாயகபுரத்தைச் சேர்ந்தவர் அரிகிருஷ்ணன். இவரது மனைவி மாலதி. இவர்களுக்கு 5-ம் வகுப்பு படிக்கும் சந்தோஷ் என்ற மகன் உள்ளார். அரிகிருஷ்ணன் நெல்லையில் உள்ள தனியார் நிறுவனத்தில் செக்யூரிட்டி வேலை பார்த்து வருகிறார்.
இதனால் அவர் குடும்பத்துடன் வண்ணார்பேட்டை இளங்கோ நகரில் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 8 ஆண்டுகளாக அவரது மனைவி மாலதி இருதய நோயால் அவதிப்பட்டு வந்தார். அவரது நிலைமை நாளுக்கு நாள் மோசமடைந்தது. கடந்த 10-ம் தேதி மயக்கமடைந்த மாலதியை நெல்லையி்ல் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் மூளைச் சாவு அடைந்ததாக தெரிவித்தனர். இதையடுத்து மாலதியின் உடல் உறுப்புகளை தானம் செய்ய கணவர் அரிகிருஷ்ணன் மற்றும் உறவினர்கள் முடிவு செய்தனர். நேற்று காலை மாலதியை நெல்லை சந்திப்பில் உள்ள கிட்னிகேர் சென்டருக்கு கொண்டு சென்றனர்.
டாக்டர் பாலசுப்பிரமணியன் தலைமையிலான மருத்துவர்கள் அறுவைசிகிச்சை செய்து மாலதியின் இரு கிட்னி, இருதயம் மற்றும் கண் ஆகியவற்றை அகற்றினர். இதில் ஒரு கிட்னி திருச்சி ஏபிசி தனியார் மருத்துவமனைக்கும், மற்றொன்று நெல்லையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும் கொடுக்கப்பட்டது.
இதயம் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. கண்களை அரவிந்த கண் மருத்துவமனை டாக்டர்கள் எடுத்துச் சென்றனர்.












Click it and Unblock the Notifications